Tuesday, March 13, 2012

இளநீர் கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்


 

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் மொழியும், பண்பாடும் பெரும்பங்கு வகிப்பதை அறிவோம். அமைதியான முறையில் நடந்த எழுச்சிகளாகட்டும், அடிமைத்தனத்தை உடைத்த புரட்சிகளாகட்டும் அவர்களது மண்சார்ந்த மொழியிலும் பண்பாட்டிலும் ஊறியே விளைந்தது என்பது வரலாறு நமக்கும் சொல்லும் ஒளிவு மறைவில்லா உண்மை.  ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும்.  ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான்.  மொழிதான் உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்கிறது.  தாயை விட தாய்மொழி மேலானது என்பர்.  நமது செம்மொழித் தமிழை காலம் காலமாக காத்துவந்த பெருமைக்குரியவர்கள் புலவர்கள்.  இவர்களை ஒரு படி மிஞ்சி நிற்பவர்கள் நமது கிராமத்தார்கள். ஆம்... அவர்களது ஒவ்வொரு செயலிலும் பாடல் பொதிந்து இருந்தது.

மனிதனின் பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பாடல்.... விவசாயப் பணிகளில் உழவில் தொடங்கி அறுவடை வரை பாடல்... ஆடு மேய்க்கும் போது பாடல்... மாடு ஓட்டும் போது பாடல்....  நல்லதுக்கு பாடல்... கெட்டதுக்கு பாடல்.... ஆடுவதற்குப் பாடல்.... ஓடுவதற்கும் பாடல்.... விழிப்புக்கும் பாடல்.... துயில்வதற்கும் பாடல்.... இப்படி தனது பண்பாட்டோடு பாடல்களை வைத்திருந்தான்.  பாடல்கள் மட்டும் தானா? பழமொழி... சுட்டிக்காட்ட விரும்பியதையெல்லாம் பழமொழியில் சொல்லிப் புரிய வைத்த தமிழன் இன்று தரம் தாழ்ந்த திரையிசைப் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறான்.

இன்றைய பிரபல தமிழ்த் திரையிசைப் பாடல் why this  கொலை வெறிடி? தனுஷ் என்கிற பிரபல நாயகன் எழுதிப் பாடிய பாடல்.  பாடல்கள் எழுதுவதை வரவேற்போம்.  இதுபோன்ற பாடல்கள் எழுதுவதை எப்படி வரவேற்பது... இன்னொரு பிரபல நாயகன் சிலம்பரசன் where is the party? என்று தொடங்கும் திரைப்படப் பாடலை எழுதி பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர்.  இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமை... இவர்கள் நாளைய தமிழகத்தின் முன்னணி நடிகர்கள்.  பாடல்களில் ஆங்கில கலப்பு செய்வதோடு அதை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.  நமது தொலைக்காட்சிகள் இந்தத் தமிங்கல கவிஞர்களை நல்ல நாள்களில் நேர்காணல் செய்து பெருமைப்படுத்துகிறது.

ஆங்கில கலப்போடுதான் மற்ற கவிஞர்களும் பாடல் எழுதுகிறார்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு இவர்களை மட்டும் எப்படிச் சொல்லலாம்.  அதுவும் இவர்கள் எழுதிய ஒரு பாடலுக்கு? அவர்களுக்கும் சேர்த்துதான்.... ஒன்று நல்லவை செய்யுங்கள் இல்லை விட்டு விலகி... ஊர்ப்பக்கம் போய் இளநீர் கடை வைத்து பிழைப்பு நடத்துங்கள்.

சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிடுவது போல் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்த செம்மொழித் தமிழ் இன்று 40 மக்களவைத் தொகுதிக்குள் சுருங்கிவிட்டது.  இந்த நாற்பது மக்களவைத் தொகுதியிலும் முழுமையான ஆட்சிமொழியாக அங்கிகரிக்கப்பட்டிருக்கிறதா என்றால்? அஞ்சலகத்திற்கு செல்கிற அஞ்சலை ஆங்கில விண்ணப்பத்தில்தான் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. 

தமிழனின் வயது சுமார் அய்ம்பதாயிரம் ஆண்டுகள் என்று பாவாணார் குறிப்பிடுகிறார்.  இந்தக் கருத்தை மொழியியல் அறிஞர் லிவிட்டும் ஒப்புக்கொள்வதாக காசிஆனந்தன் சொல்கிறார்.  அட, அய்ம்பதாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் மரணமில்லாம் மலர்ந்து வந்த தாய்மொழியை இன்னொரு அய்ம்பது ஆண்டுகளுக்குள் மாற்றிவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. 

பங்குனி சித்திரையில்இறக்குமதியான முரட்டுத் துணிகளை அணிந்தோம்... உடல் எரிந்து வேர்வை ஊற்றாய் பெருக்கெடுத்தாலும் அனுபவித்தோம்.... ஆடையில் மாறினோம்... இழப்பு நுற்பாலர்களோடு போனது. விவசாயத்தில் மேற்கத்திய முறைகளை புகுத்தினோம்... விளைச்சலில் மேம்பாடு கண்டோம்... விளைவு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தோம்.... ஆங்கில கலப்பை அணுமதித்தால்?

இனிமேல் ஆங்கில கலப்பை தவிர்க்க முடியாது.  எங்கே cement க்கு தமிழில் சொல் என்று வினாவேறு? தமிழன் தன்மானம் உள்ளவன்தானா என்று கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.  எல்லாவற்றிற்கும் தமிழில் சொற்கள் இருக்கிறது.  ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் மறைந்தமைக்கு ஆங்கில கலப்புதான் காரணம் என்பதை அறிய முடியாத மூடர்களாக இருப்பது தான் வேதனைக்குரியது.

ஆங்கிலம் பேசுவதை தவறு என்று சொல்வதாக புரிந்து கொள்ளக் கூடாது.  தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசக்கூடாது என்றே புரிந்து கொள்ளுங்கள். நடிகர்கள் கவிஞர்கள் ஆகக் கூடாது என்பது நமது வாதமல்ல.... நல்ல செம்மொழிக் கவிஞர்களாக வளர வேண்டும் என்பதே விருப்பம்.  கவிஞன் கலப்படம் இல்லாத பொருளை கற்பனையில் தரட்டும்.  காதுகளைத் தந்து கைகூப்பி வரவேற்கிறோம்.
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் 2012 மார்ச் இதழில் வெளிவந்துள்ளது.

No comments: