Thursday, October 13, 2011

அணு உலை ஆபத்தானது


ஒரு தாய் கர்ப்பமாக இருக்கிறாள். நோய்வாய்ப்பட்டுள்ள இந்தத் தாய் கர்ப்பமாக இருப்பது பன்னிரெண்டாவது முறை.  இதற்கு முன் பிறந்த 11 குழந்தைகளும் ஏதாவது ஒரு குறையோடே பிறந்திருக்கின்றன... இருந்திருக்கின்றன.... இறந்திருக்கின்றன.  இருந்தும் பன்னிரெண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாள்.  வாசிப்போரே... இந்தத் தாயின் கருவை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிவிடுவோமா? இல்லை... இன்னும் ஒரு மாதம் கழித்து பிரசவிக்க விட்டு விடுவோமா?

கருவை அழிக்க வேண்டாம்.  ஆண்டவன் கொடுத்தது, அப்படியே விட்டுவிடுவோம், குழந்தை குறையாக பிறந்தாளும் பராவயில்லை என்று சொல்வோர் தான் பலர்.   குறையாக பிறந்த குழந்தை மாற்றுத் திறனாளியாகிவிடலாம்.  இசை மேதையாகிவிடலாம்.  ஆனால், அணு உலை... சுற்றியுள்ள மனித இனத்தையே குறைவாக்கிவிடுமே! கூடங்குளம் அணு உலை ஒன்பதாவது மாதத்தில் உள்ளது.  இப்போது போய் இதை தடுப்பது என்ன நியாயம் எனச் சிலர் வாதிடுகின்றனர்.  பி(தி)றப்பது குழந்தையல்ல! ஆபத்து. செலவு செய்துவிட்டோம் என்பதற்காக சுமையை சுமக்கலாம், கொடிய விஷத்தை குடிக்கவா முடியும்.

கூடங்குளம் அணு உலை திறப்பதை எதிர்த்து சுற்றியுள்ள சுற்றுச் சூழல் ஆர்வம் மிகுந்த கிராம மக்கள் உண்ணா விரதத்தில் இருந்தனர்.  பதினொரு நாள் நீடித்த உண்ணாவிரதம் பன்னிரெண்டாவது நாள் முதலமைச்சரின் உறுதியளிப்பை ஏற்று நிறைவு பெற்றது. வடக்கே ஒரு மனிதன் ஊழலுக்கு எதிராக இருந்த உண்ணா விரதத்திற்கு இருந்த ஆதரவு, தெற்கே கடல்கோடி கிராமத்தில் நடைபெற்ற சுற்றுச் சூழலுக்கான உண்ணா விரதத்திற்கு (அதுவும் 100க்கும் மேற்பட்டோர்) பெரிய ஆதரவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அன்னாவின் மேடைக்கு படையெடுத்த அமைச்சர்களும், மெழுகாய் உருகிய நடுத்தர வர்க்கமும் இப்பிரச்னையை கவனிக்காமை வருத்தத்திற்குரியதே.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் ரஷ்யாவோடு இணைந்து திட்டமிடப்பட்ட திட்டம்.  சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட யானை வந்து சேர்ந்து வாலை துாக்கி ஆட்ட தயாராகிவிட்டது. யானைக்கு மதம் பிடித்தால் பேராபத்து என மதம்பிடித்ததை பார்த்தவர்கள் பதைக்கிறார்கள்.  இல்லை, இல்லை யானையை அடக்குவதற்கான அங்குசம் எங்களிடம் இருக்கிறது, நீங்கள் பயப்பட வேண்டாம். அய்யா மதம்பிடித்த யானை ஏன்?  வள்ளுவன் சொன்னது போல கனியிருக்க காய் எதற்கு? மின்சாரம் அனல், புனல், காற்றாலை, சூரிய ஒளி, அணு ஆகிய வழிகளில் தயாரிக்கப்படுகிறது.
இயற்கையோடு இயைந்து இருக்கிறவை காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின்சாரம். அனலும் அணுவும் ஆபத்தானவை தான்.  அணு உலை மூலம் மின்சார உற்பத்தி செய்வதில் நடைமுறைச் செலவு குறைவாம்.  எனவே, இந்தவகையான மின் உற்பத்தி செய்ய ஆளும் அமைப்பு இசைவு தெரிவிக்கிறது.  ஈட்டல் மட்டுமல்ல காத்தலும் அரசின் கடமைதான்.   அணு உலை உயிருக்கு உலை வைக்கின்ற ஒன்று என்பது நாடறிந்தது. 

அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் கனநீல் கடலில் தான் விடப்படும்.  அதனால் அப்பகுதியில் உள்ள மீன் வளம் பாதிக்கப்படும்.  இந்த பாதிப்பு அந்தப் பகுதியில் உள்ள மீனவர்களை மட்டும் பாதிக்காது, அவர்களோடு சேர்ந்து மீனை ருசிசத்து உண்ணக்கூடிய நம்மைப் போன்றவர்களும் பாதிக்கப்படுவர்.  இது தொழில் சார்ந்த பாதிப்பு என்று மட்டும் சொல்லி ஒதுங்கிவிட முடியாது.  கடல் வளம் பாதிக்கப்படும்போது சூழலும் கெடும் என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் நுண்ம பாதுகாப்பு பகுதி என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை.  அதிலும்  அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதி இல்லை.  இந்நிலையில் தற்போது அணு உலையிலிருந்து முன்றரை கிலோமிட்டர் துாரத்தில் கருங்கல் குவாரி செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அணு உலையின் அடித்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  ஆபத்து தலைக்கு மேலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அணு உலை ஆபத்தானது என்று பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவில்லை.  ஆண்டு வாரியாக ஆபத்து நடந்துள்ளதை ஒப்பிவித்துதான் சொல்லப்படுகிறது.  1986ல் சோவியத்தில் தொடங்கி சமீபத்தில் ஜப்பான் வரை நிகழ்ந்த கோர நிலைகளிலிருந்து எதிர்க்கப்படுகிறது.  உலகில் 450க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்கள் செயல்படுகின்றன.  ஜப்பானில் சுனாமியயால் நேர்ந்த சோகத்திற்கு பிறகு அணு உலைகள் குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்துள்ளது.  வளர்ந்த வல்லரசுகளும் தம் மக்களைக் காக்க 2020ஆம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்களின் உலையை மூடுவதற்கு முடிவு செய்துவிட்டன. 

அணு உலை உள்ள இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு அதன் கதிர்வீச்சு இருக்கும்.  அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.  ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டது போல், நமது நாட்டில் அந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது, எனவே நாம் அச்சப்பட வேண்டாம் என்று அரசும் அறிஞர்களும் கூறுகின்றனர்.  நமது ஊரில் நடந்த ஆழிப்பேரலையையும் ஆயிரக்கணக்கனோர் மாண்டதையும் அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்து விட்டு பேசக் கூடாது.  கூடங்குளம் அணு மின் நிலையம் பாதிப்பிக்குள்ளாகும் போது அது ஏற்படுத்தும் பாதிப்பு நாகர்கோவில் நகரம் வரை எட்டும்.  இப்பகுதியில் வாழும் சுமார் மூன்று இலட்சம் மக்களும் பாதிப்படைவார்கள் என்பதை நாம் உணர்வோடு கருத்தில் கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் உயரம் மற்ற (ஜப்பான்) அணுமின் நிலையங்களைவிட அதிகம்.  இது இத்தணை உயரம், அது அத்தனை உயரம் என அரசாங்கம் அளப்பதை விடுத்து, மக்களின் வாழ்நாளை அளக்க வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே மேற்கு வங்க மாநில முதல்வர் இது போன்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்துள்ளார்.  நமது மாநில அரசும் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுதான் நிலம் சாலை போன்ற வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தது.  பராவாயில்லை.  ஆனால், வரலாறையும் ஜப்பானையும் மனதில் கொண்டு, நிலைமையை உணர்ந்து எல்லோரும் ஒரு அணியில் இருந்து நல்வழி தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் நினைப்பதெல்லாம் பல ஆயிரம் கோடி செலவு செய்தாகிவிட்டதே! ஒரு தேர்தல் நடத்துவதற்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறோம்.  அய்ந்து ஆண்டுகள் முடிவதற்குள் இடையிலேயே ஆட்சியை களைத்து திரும்பவும் தேர்தல் நடத்துகிறோம்.  கேட்டால் ஜனநாயம் என்கிறோம்.  இதற்காக ஒரு போதும் ஆள்பவர்களும் வருந்தியதில்லை.  நாங்களும் வீதிக்கு வந்து அழுததில்லை.  ஆனால்...

தெரிந்து கொண்டே தீமையில் தள்ளுவதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.  மின்சாரத்தின் உற்பத்திக் கேற்ற பயன்பாட்டை முறைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தலாம்.  மக்கள் முதலில் வாழ்வது முக்கியம்.  பின்புதான் குளிர்சாதன அறைகளில் வாழ்வது அவசியம்.  அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க நீர் மின் நிலையம், காற்றாலைகள், என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி கொண்டு பெருமளவு மின்சாரம் தயாரிக்க அரச அதிக அக்கறை செலுத்தலாம்.  மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு அணு உலைகளைத் தவிர்த்து அச்சுறுத்தலைப் போக்கும்... காத்திருப்போம்....