Tuesday, March 6, 2012

மழை வருது... மாற்றம் தருது....


நான் அப்பா பேசுறேன்ம்மா, ஊர்ல மழை பேயுதா? பேரனையும் பேத்தியையும் பத்திரமா பாத்துக்கோ, மழையில நனையவிடாத, ஈரத்துல விளையாட விடாத, கண்ணு... குழந்தைகளை கண்ணும் கருத்துமா பாக்கனும். கண்டதைத்திங்க விட்டுறாதா... இப்படி மழை காலத்தில் மழையடிக்குதோ இல்லையோ அட்வைஸ் மழை  பொழிவதற்கு பஞ்சமிருக்காது.   அப்படி இந்த மழை மீது ஏன் இந்த பயம்.  மழை வேணும் வேணுமுன்னு தவமிருப்பவர்கள் கூட ஒரு வகையான அச்சத்துடன் ஒதுங்குவது ஏன்?

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் மழைகாலத்தில் வயதானவர்களுக்கு வந்த டயரியாவால் கொத்து கொத்தாய் செத்துள்ளார்கள்.  இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆஸ்பத்திரிக்கு வண்டி கட்டிப் போன அந்தக் காலத்தில் இறப்பு கூடுகட்டி கூடவே இருந்துள்ளது.   இறந்தவர்களை அடக்கம் செய்ய புதைப்பதற்கு தோண்டினால் தண்ணீர் ஊற்றெடுக்கும், எரிப்பதற்கு விறகு, எரு ஓடு கிடைக்காமல் அல்லல்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக்கால இறப்பின்போதும் அனுபவமுள்ள அய்ம்பதை தாண்டியவர்கள் தாங்கள் அனுபவித்த துயரத்தை  கதைகதையாகச் சொல்வார்கள்.  ஆனால், இன்று மருத்துவம் வளர்ந்துள்ளது. மருத்துவமனைகள் ஊரில், ஊருக்கு அருகில் வந்துவிட்டது. வசதியுள்ளவர்களுக்கு மருத்துவர் வாசலுக்கு வருகிற வளர்ச்சி கண்டுவிட்டோம்.  இருந்தும் மழை அச்சம் மறைந்தபாடில்லை.  உண்மைதான்...

மழை தண்ணீரை மட்டும் மண்ணுக்கு கொண்டு வருவதில்லை.  கூடவே வான்வெளியில் உள்ள சுகாதரக் கேட்டையும், வீதிகளில் கழிவுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது.  தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காத தமிழ் சமூகத்தில் சூழல் கேடு சுதந்திரமாக உலவுகிறது. எனவே, மழை குறித்த பயம் இருக்க வேண்டியது அவசியமாகிறது.  மழையில் நனைந்தவுடன் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு முதலில் முந்திக் கொண்டு வருவது ஜலதோசம். மூக்கடைப்பு. மூக்கில் நீர் ஒழுகுதல்.  இதற்கு காரணம் மழையோடு வந்த கிருமி மூச்சுக்குழாயில் தொற்றிக்கொள்வதுதான்.  மூச்சுக்குழாயில் உள்ள கிருமி நுரையீரலுக்கு பரவினால் நிமோனியா காய்ச்சலுக்கு கொண்டுபோய்விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மழைநீரும் கழிவு நீரும் இணைந்து  தெருவோரகங்களில் தேங்குகின்ற நாள்கள் எல்லாம் கொசுக்களுக்கு தீபாவளிதான்.  கொசு அசுரன் அரசாங்கம் அடிக்கிற பூச்சிக் கொல்லிகளுக்கெல்லாம் கட்டுப்படுவதில்லை.  ஆயுளைக் குறைவாகக் கொண்ட கொசு, மனிதனின் ஆயுளைக் குறைக்கின்ற நோய்களை உருவாக்குவதில் அசுரபலம் கொண்டு கடிக்கிறான்.  இந்தக் கொசுக் கடியால் மலேரியா, யானைக்கால் நோய் எனும் பைலேரியா நோய் மனிதனிடம் குடிகொள்கிறது.  மனிதன் குடியிருக்கின்றபகுதியில் குடிக்கின்ற நீர், குளிக்கின்ற நீர் திறந்து இருந்தாலும் இங்கு கொசு உற்பத்தியாகும்.  இந்த நீரில் உருவாகின்ற கொசு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல், குளிரும் காய்ச்சல், உடல்வலி போன்றவை வருகின்றன. மழைக் காலங்களில் பாதுகாப்பில்லாத தண்ணீரைக் குடிப்பது வலியை வலிய வாங்குவதற்குச் சமம் ஆகும்.  குடிநீரில் கழிவு நீரோ, எலியின் சிறு நீரோ உட்புகுந்து நம் உடலுக்குள் புகுந்துவிட்டால் அது தரும் எதிரிவினை டைபாய்டு காய்ச்சல், காலரா, மஞ்சள்காமாலை, டயரியா.கெப்டிடிஸ் ஏ வகை வைரஸ் கிருமி முதலில் ஈரலைத் தாக்கி, மஞ்சள் காமாலை வருவதற்கு வழி செய்யும்.  இந்த வைரஸ் கிருமி மல ஜலத்திலிருந்து பரவும். கெப்படிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது.  இதனை எலி காய்ச்சல் என்றும் கூறுவதுண்டு. பாக்டிரியாவால் தாக்கப்பட்ட எலிகளின் சிறுநீர் தண்ணீரில் கலந்து விடுகிறது.  அந்தத் தண்ணீரின் வாயிலாகவே எலி காய்ச்சல் வருகிறது.  இந்தக் காய்ச்சல் உயிரைக் கூட பலிவாங்கி விடும்.  காய்ச்சல், மூட்டவலி, மஞ்சல் காமலை ஆகியவை எலி காய்ச்சலின் முன்னோடிகள்.     இந்ந வலிகளிலிருந்து விடுபட வழிகளே இல்லையா.... இருக்கிறது. 

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து, பிறகு வடிகட்டிக் குடிக்க வேண்டும்.  பாட்டில் தண்ணீர் குடிக்கிறேன் பாதுகாப்புதானே என்று நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம்.  பாட்டில் தண்ணீரின் பாதுகாப்பு எந்தளவிற்கு என்பதை உறுதியிட முடியாது.  எனவே அந்தத் தண்ணீரையும் காய்ச்சிக் குடிப்பது சாலச் சிறந்தது.  அதே போல கோலா பானங்களையும் தவிர்ப்பது நல்லது.  பாதுகாப்பான தண்ணீரை உட்கொள்வதோடு தன்சுத்தமும் அவசியம் ஆகும்.   சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  கழிவறைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்றாக கழுவது அவசியம். சோப்புப் போட்டு கழுவலாம்.  இல்லை நமது பாரம்பரிய முறையான சாம்பளை போட்டு கை கழுவதும் சரியான முறையாகும்.  ஈ, கொசு மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்த்துவிடவும்.

மழைக்காலங்களில் பலரும் அவதிப்படுவது மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் சார்ந்த நோயால்.  இது பாக்டிரியாவால் வரக்கூடியது.  இந்த பாக்டிரியாவின் வளர்ச்சிக்கு மழைக்காலத்தில் இருக்கக் கூடிய குளிர்ந்த ஈரப்பதமான சூழல் வழி வகுக்கிறது.  தொட்டவுடன் பற்றிக்கொள்ளும்  ஒரு தொற்று வியாதி மெட்ராஸ் ஐ. பாதிப்புக்குள்ளான கண்ணைத் தொட்டு அதே கையால் பிறரைத் தொட்டால் கையிலிருந்த பாக்டிரியா சட்டென ஒட்டிக்கொள்ளும்.   பார்த்தால் வரும் என்பது பழங்கதை.  ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு வேகமாகப் பரவும்.  எதிர்ப்புசக்தி குறைந்தவர்களிடம் எளிதாகத் தொற்றிக்கொள்ளும்.  கண் சிவத்தல், வீங்குதல், அரிப்பு இவை ஆரம்ப நிலை அறிகுறிகள்.  அதனைத் தொடர்ந்து வெள்ளை நிரவ திரவம் கண்களின் ஓரத்தில் வெளியேறும்.  அரிப்பு இருக்கிறதே என்று கண்களை தேய்க்க கூடாது.  இதற்கு பாட்டி வைத்தியம் எல்லாம் பார்க்க வேண்டாம்.  ஊரில் சொல்கிறார்கள் என்று எண்ணெய் விடுவது நல்லதல்ல.

மெட்ராஸ் ஐ சுத்தமாக இருந்தால் கட்டுப்படும்.  வெள்ளை திரவம் வரும் வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருப்பது, நன்றாக கைகளை கழுவுவது சிறந்தது.  நோய் வந்தவர் பயன்படுத்திய துண்டு, கைக்குட்டை சோப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.  ஓரே அறையில் தங்குபவர்கள் தனித் தனியாக உடைமைகளை பயன்படுத்த வேண்டும். ஒரு கண்ணிலிருந்து அடுத்த கண்ணிற்கு பரவ நிறைய வாய்ப்புள்ளது.  கிருமி பாதித்த கண்ணைத் தொட்டு அதே கைகளால் அடுத்த கண்ணைத் தொடும்போதுதான் பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.  மருந்து, சுத்தம், கட்டுப்பாடு என்ற மூன்று முறையைப் முறையாக கடைப்பிடிக்கும் போது மற்றவர்களுக்கு பராவமல் மட்டுப்படுத்த முடியம்.

மழைக்காலங்களில் செருப்புப் போடாமல் வெளியே செல்ல வேண்டும்.  செருப்புப் போடாமல் போகும் போது பல்வேறு வினைகளை நாம் சம்பாதிக்க வேண்டிவரும்.  கால் விரல் இடுக்குகளை நன்றாக சுத்தம் செய்வது சிறந்தது. 
மழைக்காலங்களில் குழந்தைகளை சரியாக கவனிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.  கோடைகாலத்தில் விடுமுறை விட்டுவிட்டு, மழைக்காலங்களில் பள்ளிகள் நடத்தப்படுகிறது நமது நாட்டில். எனவே, குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.  உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைட்டமின் நிறைந்த காய்கறி பழங்களை உண்ணக் கொடுங்கள்.  ஆகாத, மேற்கத்திய உணவு முறைகளை விட்டுவிடுங்கள்.  சேகதி சேருமிடங்களில் விளையாட விடாதீர்கள்.  வீட்டையும், நாம் வாழும் தெருக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 

மேகம் கருக்குது மின்னல் அடிக்குது என ஜோதிகா போல மழையில் ஆடுவதற்கு விருப்பம் தான்.  ஆனால், நம் உடலின் எதிர்ப்பு சக்தியையும் தெரிந்து கொண்டு மழையில் அடடா மழைடா அடை மழைடா என ஆட்டம் போடுவது நல்லது.  குறிப்பாக முதல் மழையில் நனைவதை அறவே தவிர்த்திடுங்கள்.  அந்த மழை வான்வெளியில் உள்ள அனைத்தையும் தயவு தாட்சன்யமின்றி தரைக்கு கொண்டு வரும்.  நாம் வளர்ந்திருக்கிறோம் என்பதின் வெளிப்பாடு நமது சுகாதரத்திலும் ஆரோக்கியத்திலும்தான் வெளிப்படும்.  வளர்ச்சியைப் பார்ப்போம்.

மழைக்காலம் கால்நடைகளையும் விட்டுவைப்பதில்லை  இக்காலங்களில் கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.  கோமாரி நோயுள்ள மாடுகளின் வாயில் அதிகளவில் நீர் கசியும், சரியாக தீவனம் திங்காது. தொண்டை அடைப்பான் நோய் தாக்கியிருந்தால் உடல் சூடு, தொண்டை வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.  நோய்கள் தாக்கியிருப்பது தெரிந்தவடன் கால்நடை மருத்துவர்களை பார்த்து கால்நடைச் செல்வங்களை காக்கலாம்.
 பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்துள்ளது.

No comments: