Wednesday, March 7, 2012

பண்டிகைகள் பண்படவேண்டும்


மனித மனம் கொண்டாட்டங்களில்தான் மகிழ்ச்சியடைகிறது. பண்டிகைகளில்தான் கொண்டாட்டங்கள் மிகுந்திருக்கின்றன. பண்டிகைகள் என்று கையாளப்படுகிற விழாக்கள் உறவுகள் ஒன்று கூடும் நிகழ்வாகவே காலம் காலமாக இருந்து வந்துள்ளன.  இந்தியாவில் பெரும்பாலோர் கொண்டாடுகிற விழாவாக தீபஒளி திருநாள் விளங்குகிறது.  “தீபாவளிக்குதான் நெல்லுச்சோறு ஆக்குவோம், அதுவும் ஒரு நேரத்துக்குத்தான், அப்புறம் தைப்பொங்கலுக்கு, இதுல முனு நாளும் நெல்லுச் சோறு கிடையாது. மாட்டுப் பொங்கல் அன்னைக்கு மட்டும்.  மத்த இரண்டு நாளும் சாமைச்சோறு... மருமகன் மறுவீடு வந்திருந்தாளும் ஆடியன்னைக்கு கூட சாமைச்சோறுதான், அப்பயெல்லாம் நெல்லுச்சோறு சாப்பிடுதறபத்தியே பேசிக்கிட்டுருப்போம்  இது எங்க அப்பாவின் பால்ய காலம். விழாக்களில் சோறு சாப்பிடுவதே மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

நெல்லுச்சோறு, கறி, புத்தாடை, புதிதாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதல், விதவிதமாக வெடிவெடித்தல் என தீபாவளி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.  கிராமங்களில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் வசதிஇருப்பவர்கள் மட்டுமே கொண்டாடிய விழா தீபாவளி.  இன்று எல்லோரும்... “எங்கள் வீட்டில் புதுத்துணி எடுப்பது, வீட்டிற்கு வெள்ளையடிப்பது...மராமத்து பார்ப்பது.... இப்படி... தை தான் விசேசம். நாங்க, தீபாவளி சமயம் விவசாய வேலையில் மூழ்கியிருப்போம்“ என்கிற விவசாயி வீட்டிலும் தீபாவளி கோலுச்சுகிறது. விவசாய குடும்பங்களிலிருந்து வேறுபட்ட பணிகளுக்கு செல்வோர் தொடங்கியதும், தீபாவளி எல்லா கிராமங்களிலும் ஒளிர்கிறது.

கொண்டாட்டங்கள் அவசியம்தான். ஏனென்றால், உழைப்பு மட்டுமே வாழ்க்கையில்லை, உழைப்பால் பிழைப்பதுவும்தான் வாழ்க்கை. உழைப்பு, உணவு, உடை, உறைவிடம் உற்சாகம், உறக்கம் இந்த “உ“ க்கள் சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தம்தான். ஆனந்தமான வாழ்க்கை வாழ அனைவருக்குமே ஆசையிருக்கும்.  ஆனால், வாழ்வதற்கு இந்த உலகம் வேண்டும்.  இதை மறுக்க முடியாது, மறக்கவும் கூடாது....

அத்தனைக்கும் ஆசைப்படு என்றதும் நாம் நன்மை எது தீமை எது என்று பார்க்காமல் அனைத்தின் மீதும் ஆசைப்படுகிறோம். அளவற்ற பற்று கொள்கிறோம். தீபாவளிக்கு முன்னதாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மது மகன்களுக்கு மதுப்புட்டிகளெல்லாம் இலவசம், இதில் மது மகன்களுக்கெல்லாம் ஏக சந்தோசம். தெருவிக்கு பத்து இருபது பேரை விதைக்காய் இருந்தார்கள். அவர்களிலும் பத்துப்பேருக்கு ஊத்தி, ஊருக்கு பத்து இருபது பேர் மது அருந்தாதவர்கள் என்ற நிலையை உருவாக்கிவிட்டது உள்ளாட்சி தேர்தல்.  தொடர்ச்சியாக தொன்னுறு நாட்கள் மது வாங்கிகொடுத்து வாக்கு வாங்கியவர்கள், வாக்குத்தவறாமல் இருக்கப்போகிறார்களா?

தீபாவளி சமயம் இரண்டுநாட்களில் இருபதாயிரம் உபரிவருமானம் என்கிறார் மதுக்கடை ஊழியர். அக்கடையில் தீபாவளி அன்று மட்டும் மது விற்பனை ரூபாய் ஆறு இலட்சம்.  ஒரு கடையில் விற்பனையே ஆறு இலட்சம் என்றால் தேநீர் கடைபோல் நீக்கமற நிறைந்திருக்கும் மதுக்கடைகளின் விற்பனையை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.  பணத்தை தண்ணியா செலவு செய்யாதே என்பார்கள், இன்று, மது தண்ணிக்கு கணக்கே இல்லாமல் செலவு செய்து மகிழ்ச்சியை வாங்குவதற்குப் பதிலாக வம்மை விலைக்கு வாங்குகின்றனர். கொஞ்ச நாளில் எல்லாத் துண்பங்களையும் துணைக்கு அழைப்பர். 

தீபாவளி திருநாளை குறிவைத்து தேவைக்கு மிஞ்சிய பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.  வாழ்நாள் எல்லாம் செலவைத் தருகிற செல்போன்கள் விற்பனை படு ஜோர். சலுகை விலை, அன்பளிப்பு என்ற போர்வை போர்த்திய செல்போன் கடைகளில் கட்டுக்கடங்கா கூட்டம். விடுமுறை விடாமல் கடைகளை திறந்து வைத்து விற்பனையை துரிதப்படுத்தினர்.  இதில் நமது அரசு அலைபேசி சேவையில் கூட புல் டாக்டைம் என்ற வலை விரிக்கப்பட்டது.  கையில் உள்ள காசை அவர்கள் கையில் மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர்.  இதே போல் மின்சாதனப் பொருட்கள் விற்பனை... ஆசையைத் துாண்டும் விளம்பரங்கள் எல்லா ஊடகங்களிலும். கையில் காசு இல்லாதவன் கந்து வட்டிக்கு வாங்குகிறான். தீபாவளி முடிந்து விட்டது.  கடன் முடியவில்லை. இதைத்தான்   ஆசையே துண்பத்திற்கு காரணம் என்றார்களோ!

தீபாவளிச் சந்தைக்கு சென்றால் நெகிழிப் பொருட்களும், பட்டாசும்தான் பிரதான விற்பனை.  கூட்டம் கூட்டமாக இயற்கைக்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி மாசை வீங்க வைப்பதில் அவ்வளவு என்ன சந்தோசமோ? ஒருவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியதாக பெருமை கொள்கிறார்.  இன்னொருவர் ஐநுாறு ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என வருத்தப்படுகிறார்.  மதுரையில் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் பெரிய காகித குவியல்.  அடாத மழையிலும் விடாமல் வெடிவிட்ட சரித்திர நாயகர்கள் நம்மூர்க்கார்கள்.  இதைத்தான் காசை கரியாக்குவது என்றனர் நம் முன்னோர்கள்.  காது கிழியட்டும், காசு கரையட்டும், சூழல் கெடட்டும் எனக்கு கவலையில்லை.  என்னுடைய வேலை அவனுக்கு குறையா வெடி போடக்கூடாது.  எதற்கு வெடி போடுகிறோம் என்று தெரியாமல் கூட ஒரு கொண்டாட்டம்.

அறியாமல் செய்கிறார்கள், அவர்கைள விட்டுவிடுவோம் என்று சொல்லி விட்டு விட முடியாது. அறிவுரை சொல்ல வேண்டிய அப்பனும் ஆத்தாளும் முன்னத்தி ஏராக வெடித்து குழந்தைக்கு கெ(ா)டுக்கிறார்கள்.  பயந்த சுபாவம் கொண்ட பெண்களும் வெடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டு எதிர்த் வீட்டுக்காரியோடு போட்டி போடுகிற அவலம் இங்குதான்  வீதியேறியது. வீதியெங்கும் மழைபெய்ததால் காகிதக்கூழ். இரவு தொலைக்காட்சி செய்தியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னையின் மாசுபாடு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற செய்திவருகிறது.  அதைப் பார்த்துக்கொண்டு இரவு வானவெடி வெடிக்கிறார்கள்.  மத்தாப்பு கொழுத்துகிறார்கள்.  பூமி புகைமண்டலமாக காட்சியளித்தது தீபாவளி இருளில்.  யாருக்கும் கவலையில்லை! எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். இந்த சந்தோசத்திற்குத்தானே ஒரு வருடம் காத்திருந்தார்கள்.  பலருக்கு பலத்த கவலை மழை அடிக்கடி அடிக்கிறதே என்று.  மீதமிருந்து பட்டாசை அடுத்தடுத்த நாட்களில் வெடித்து சரியாகப் பயன்படுத்தியதாக திருப்பதிபடுத்திக்கொள்கிறார்கள்.  அரசாங்கம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்குப் பின்னும் முழித்துக்கொண்டதாக தெரியவில்லை.

இந்த பட்டாசு சீனாவை புர்வீகமாக கொண்டதாம்.  தற்போது சிவகாசியில்தான் உற்பத்தி. பட்டாசு தொழில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கத்தின் மீது பற்றுள்ளவர்கள் பட்டாசு வெடிக்காமல், அந்த தொழிலுக்கு வெடிவைப்பதுதான் சிறந்ததாகும். இத்தொழில் ஈடுபடுபவர்கள் உள்ளாகும் ஆபத்துகள் அதிகம்.  அரசாங்கம் இத்தொழிலை தடைசெய்தால் தலைமுறை காக்கும் தர்மத்தை செய்யும். புலிகளை காக்க திட்டம் வைத்திருக்கிறோம்.  புவியைக் காப்பதில் நாட்டம் வேண்டாமா?

குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளையும், அது தரும் விளைவையும் போதிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். விடுமுறைக்கு முன்னர் ஆசிரியர்கள் சூழல் பேணுவது குறித்து ஒவ்வொரு மாணவனுக்கும் ஓதுவது அவசியம்.  வாழ்க்கையின் மீது அக்கறையுள்ள ஆசிரியர்கள் இதை அறப்பணியாக செய்யலாம்.  வகுப்பறை வாழக் கற்றுத்தரும்... வாழ்க்கையைக் கற்றுத்தரும்....

தீபாவளியன்று வருகிற இன்னொரு கொண்டாட்டம் திரைப்படங்கள்.  முன்பதிவு வசூலில் சாதனை, திரையரங்குகளில் சாதனை... இந்த சாதனைகளுக்குப் பின்தான் இல்லாமைக்கான சோதனை துவங்குகிறது.  ரூ. 300 லிருந்து ரூ. 500 கொடுத்து படம் பார்க்கிற அவலம் தீபாவளியன்று திரையரங்குகளில் அரங்கேறுகிறது.  பல நாள் உழைப்பு, சேமிப்பு, கடன் எல்லாம் ஒரே நாளில்...

பகிர்ந்துகொள்வதில்தான் உண்மையான சந்தோசம் உள்ளது.  ஆரோக்கியமான உணவுக்கு வழியில்லாம் நம்மூரிலேயே ஏரளாமனோர் இருக்க வீண் செலவுகளை ஏன் செய்ய வேண்டும்.  கூடுதல் விலை போட்டு உடை எடுப்பவர்கள் கொஞ்சம் விலை குறைத்து உடை எடுத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் பணத்தில் கஷ்டப்படும் உன் சொந்தக்காரன் பிள்ளைக்கு புத்தாடை எடுத்துக்கொடு. அவன் கந்துக்கடைக்கு போகமாட்டான்.  தீபாவளியன்று வாழ்த்தை பகிர்ந்து கொள்வது மட்டும் வாழ்க்கையில்லை.  பிறர் வாழ்க்கை வளத்திலும் வாழ்த்தைத் தருவதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.   ஏழையின் சிரிப்பில் இறைவன், ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது வேண்டாமே.  அவர்களும் நம்மை ஒத்தவர்களாக இருக்க ஒத்துழைப்போம்.

எங்க பாட்டனும் பாட்டியும் பூட்டனும் பூட்டியும் வாழ்ந்த பூமி... நாம் வாழ்கின்ற பூமி... நம்ம உறவுகள் வாழவேணும் இந்த பூமியில். நாம் வாழும் பூமி நமக்கனதாய் அமைந்திட இயற்கையோடு இயைந்த வாழ்வை தேர்ந்தெடுத்தல் நலம்.
 இவள் புதியவள் சனவரி 2012ல் வெளிவந்தது.

No comments: