Saturday, November 10, 2012

குஞ்சுகளை கோழி காக்கும் பிஞ்சுகளை பெற்றவர்கள் காப்போம்


அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த வகுப்பாசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.  உங்களை முதலில் பார்த்த போது கொஞ்சம் பயமாக இருந்தது.  இப்போது அப்படி இல்லை. நான் முன்பு படித்த திருமயம் பள்ளியில் அடிக்கடி பாராட்டுவார்கள்.  நீங்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் பாராட்டுகிறீர்கள்...  நான் முன்பு படித்த பள்ளியில் நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்.  ஆனால் இங்கு முடியவில்லை.  அங்கு என் தந்தையால் பணம் (fees) கட்ட முடியவில்லை. இங்கு முடிகிறது.... இப்படி ஒரு வசனம் பசங்க திரைப்படத்தில் வரும்.  இந்த வசனத்திலிருந்து ஒரு செய்தி ஆங்கிலத்தில் பேசுவது பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு மோகமாகவே பார்க்கப்படுகிறது.  இன்னொன்று ஏன் அந்த அரசுப் பள்ளி தனியார் பள்ளிக்கு ஈடுகொடுக்க இயலவில்லை....

ஆங்கில மோகம், தனியார் பள்ளிகளின் தரத்தின் மீது மோகம் பல சிறார்களை காவு வாங்கியது, வாங்குகிறது, வாங்கும்.... தாம்பரம் அருகே உள்ள சேலையூர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி, பள்ளிக்கூட பஸ்சில் இருந்த ஓட்டை வழியே விழுந்து பலியானாள். பாதுகாப்பின்றி ஓட்டை விழுந்த பஸ்சில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ்சுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள் தகுதிச் சான்றிதழ் (பிட்னஸ் சர்ட்டிபிகேட்) வழங்கினர் என்பது வேறு விசயம்.  அடுத்த இரண்டாவது நாளில் ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ்சில் சிக்கி அதே பள்ளியை சேர்ந்த 3 வயது சுஜிதா எல்கேஜி பயிலும் சிறுமி தலை நசுங்கி பலியானார். சிதம்பரத்தில் பேருந்தில் கீழே இறங்கும் போது பின்பக்க டயர் ஏறி பலி,  பிற்பாடு குழந்தைகள் விபத்தில் இறந்த செய்திகள் தினந்தோறும் ஊடகங்களில்....

நடுத்தர குடும்பத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஸ்ருதியின் தந்தை என் மகள் மறைந்துவிட்டாள் என்பதை என்னாலும் என் குடும்பத்தினராலும் நம்பவே முடியவில்லை. எனது நினைவில் தொடர்ந்து வலம் வந்து கொண்டு இருக்கிறாள். காலையில் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று முடிச்சூரில் இறக்கிவிட்டுச் செல்லும் நான், இரவில் வீடு திரும்பும்போது சமயங்களில் விழித்திருப்பாள். பெரும்பாலும் தூங்கி விடுவாள். இப்போது நிரந்தரமாகத் தூங்கச் சென்று விட்டாள்.

அவளது இழப்பு ஒருபுறம் எங்களை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்தினாலும், சமூகத்திற்கு மிகப்பெரிய பாடத்தை தனது மரணம் மூலம் உணர்த்திவிட்டுச் சென்று விட்டாள். அவள் மூலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் பஸ்கள் மூலம் கலவி பயிலச் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு சட்ட ரீதியான தார்மிகப் பாதுகாப்பு வளையம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. 

குழந்தைகளை ஆசையோடு பெற்று, வளர்த்து மிகப்பெரிய கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் மறக்கமுடியாத பாடத்தை உணர்த்தி விட்டாள்.  வேறு எந்த ஒரு பள்ளிக் குழந்தைக்கும் இனி இதுபோன்றதொரு மரணம் நிகழாவண்ணம் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக என் மகள் ஸ்ருதி அமைந்து விட்டாள் என்பது தாங்கமுடியாத துயரத்திலும் ஆறுதலான விஷயம் என்று கண்ணீர் பெருகி வழிந்தோடியபடி கூறினார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.  சம்பவம் நடந்த இரண்டு மூன்று நாள்கள் ஸ்ருதியின் தந்தை ஊடகங்களில் காட்சிப் பொருளாய் இருந்தார்.

சிட்டாய் பறக்கின்ற சிறார்களின் சிறகுகள் முறிந்தமைக்கு பள்ளி நிர்வாகமும், வாகன ஓட்டுநர்கள் மட்டும் தான் காரணமா? பறிகொடுத்த பெற்றோர்கள் இல்லையா? பள்ளி நிர்வாகமும், வாகன ஓட்டுநர்களும் அம்புகள்... எய்தவர்கள் பெற்றோர்கள்...  மூன்று வயது சிறுமியும், ஏழுவயது சிறுமியும் வாகனத்தில் சென்று படிக்க தகுயானவர்களா? இந்தக் கேள்வி குறுகிய மனதுள்ளவர்களின் கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம்... ஆனால், உண்மை அதுவல்ல...

இந்திய சுதந்திரத்திற்குப் பின் கல்வி குறித்த விழிப்புணர்வு ஆள்வோர்களால் வாழ்வோர்களுக்கு கிடைக்கப் பெற்றது.  இதன் தொடர்ச்சியாக ஆள்வோர்கள் ஆங்காங்கே ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்தனர்.  இதன் ஆழம் இன்றைய அனைவருக்கும் கல்வி இயக்கம் வரை விழுதுவிட்டுள்ளது. தொடக்க காலத்தில்  தொடக்கக்கல்வியை சொந்த ஊரில் படித்தவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கு அண்டை ஊர்களை நாடினர்.  “ஐந்து கிலோ மீட்டர் வரை உள்ள தூரம் அண்டை ஊர்களுக்கான வரையறை  ஐந்து கிலோ மீட்டர் நடந்தும், இதற்கு மேல் உள்ள தூரத்தை மிதி வண்டிகளில் சென்று கல்வியைத் தொடர்ந்தவர்கள் பலர் ஆசிரியராகவும், சிலர் காவல் துறையிலும், இன்னும் சிலர் விவசாயப் பணிகளையும் பார்க்கின்றனர். அடுத்த தலைமுறை கல்விக்கு ஆங்காங்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

இந்தி எதிர்ப்புக்கு பின் இங்கிலிஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேளையில் ஆங்கில வழி பள்ளிகள் ஆங்காங்கு முளைக்கத் தொடங்கின.  இந்தச் சேவையை தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்தன.  உலகத்தரம் உங்கள் ஊரிலும் கோசத்தோடு பெரும் நகரங்களில் தொடங்கிய தனியார் ஆங்கில வழி கல்விச் சேவை இன்று குக்கிராமம் வரை வேர் விட்டுள்ளது.  இருந்தும் அண்டைப் பள்ளிகளில் மூன்று வயது பாலகர்களை படிக்க அனுப்புவதில் தயக்கம் காட்டி, வாகனங்களில் சென்று திரும்புவதையே சமுக மதிப்பாக கருதுகின்றனர்.  

இந்தப் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்க வேண்டும். வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் பள்ளி வாகனம் என எழுத வேண்டும்.  பள்ளி வாகனமல்லாத பிற தனியார் வாகனம் என்றால் பள்ளிப் பயன்பாட்டுக்கு என்று எழுத வேண்டும்.  மாணவர்கள் பயணிக்கும் வாகனத்தில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி... ன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள்... விபத்து ஏற்பட்டால் எளிதாக வெளியேறுவதற்கு அவசர வழி... வாகனத்தின் மீது பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்... குழந்தைகளுக்கு உதவ உதவியாளர்... இத்தனையோடு ஆசிரியர் ஒருவர் உடன் செல்வது.... இன்னொன்று கனரக வாகனத்தை இயக்கும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்.... இவ்வளவு வழிகாட்டுதல் இருந்தாலும் இதனை கடைபிடிப்பார் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  முறையாக இருந்திருந்தால் பச்சிளம் குழந்தைகள் இறந்திருக்கமாட்டார்கள்... என்ன செய்யவது?

தனியார் இப்படி என்றால் அரசு அண்டை பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிப்பதாக தெரியவில்லை.  அதை விடுத்து விலையில்லா பேருந்து பயணத்தை அரசு அறிவித்தது.  ஆரம்பக் கல்விக்கே அயலூருக்கு செல்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த பேருந்துகளில் ஏறுவதற்கு அவர்கள் படுகின்ற அவதி கொஞ்சம் நஞ்சமல்ல... மாணவர்களை பார்த்ததும் பேருந்து பத்து மீட்டர் தள்ளி நிற்கும்.  நமது குழந்தைகள் ஓடுவார்கள்... இடறி விழுந்தால் என்னாவார்கள் என்பது குழந்தைகளை பெற்றெடுத்து அந்த அரசு ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் தெரியும்... இருந்தும் இதைச் செய்ய அவர்கள் தயங்குவதில்லை, தவறுவதில்லை.  பேருந்தில் பயணிக்கிற நாமும் தட்டிக்கேட்பதில்லை. 

பள்ளி சிறார்களை ஆட்டோ போன்ற சிறிய வாகனங்களில் பொருள்களை அள்ளிப் போட்டு போவது போல் ஏற்றிச் செல்கின்ற அவலத்தைப் பார்த்தும், பயமின்றியே பெற்றோர்கள் அனுப்புகிறார்கள் என்பதற்கான காரணம்? “நான் பட்ட சிரமத்தை என் குழந்தை படக்கூடாது  “ஆங்கிலம் தெரியாமல் நான் பல நேரங்களில் ஊமையாக இருந்திருக்கிறேன்.  எனது பதவி உயர்வு அதனாலலேயே பாதிக்கப்பட்டது என்ற சில பத்தாம் பசலிகளின் கூப்பாட்டால், மூடை தூக்கும் முருகனும், அன்றாடம் சம்பளம் பெறும் அத்தக்கூலி பணியாளரும், குறைந்த ஊதியத்தில் நிறைந்த பணியை செய்து கோடிக் கனவில் இருக்கும் குபேரனும், ஆங்கில வழி பள்ளிகளுக்கு ஆயிரமாயிரமாய் கொட்டுகின்றனர். இவர்கள் மட்டுமில்லை... அரசு ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை தனது குழந்தை தான் பணி செய்யும் பள்ளியில் சேர்ப்பதில்லை. மாறாக தரம் பார்த்து வேறு தனியார் பள்ளியிலேயே சேர்த்துவிட்டு, தான் பணியாற்றுகிற பள்ளியில் சேர்க்கை குறைவு என்கிற கூப்பாடு வேறு.  இதோடு நின்றுவிடாமல், தன் குழந்தைக்காக நகரத்தில் தங்கி, தாமதாமாக பள்ளிக்கு வந்து அரசு பள்ளியின் தரத்தை கேள்விக்குறியாக்கி? குழந்தைகளின் பாதுகாப்பை   பலவீணப்படுத்துவதுதான் துயரம்.

ஆறாம் வகுப்பு படிப்பதற்காக என் அப்பா ஐந்து கிலோமீட்டர் நடந்தார், அடுத்த ஊர் பள்ளிக்கு நடந்து சென்று படிக்க வேண்டும் என்பதற்காகவே என் அத்தை ஐந்தாம் வகுப்போடு நின்றார்.  (ஆனால், காடு மேடெல்லாம் நடந்து ஆடு மேய்த்தார் என்பது வேறு விசயம்) இன்றைக்கு அந்தந்த சிற்றூர்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பயிலாமல் அடுத்த ஊர்களுக்கு செல்வதாகவே அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.  சிறு நகரங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை சாலைகளில் நெரிசலுக்கு காரணம் பள்ளி வேளை என்பதை நாம் அறிவோம்.   குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை அந்தக் குழந்தை நடந்து சென்று படிக்கட்டும்.  குழந்தைகள் நடந்து சென்று படிக்கும் போது வாகன நெரிசல் வெகுவாக குறையும்.  வாகன எரிபொருள் பயன்பாடு குறையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பும் நம் கைக்குள் இருக்கும் என்பதையும் நாம் அறிந்திட வேண்டும்.

அதே நேரம் கல்வித் தரம் வீட்டிற்கு அருகிலேயே கிட்டச் செய்வதும் அவசியமாகும்.  சமூக மதிப்பீடுகள் மாற வேண்டிய நேரமிது. தரத்தில் தனியார் பள்ளிகளை தூக்கி விழுங்கிட அரசு முன்னெடுக்க வேண்டும்.   வங்கிகளை பொதுவுடமையாக்கிய பெரும் பேறு இந்திராவைச் சாரும்.  இந்த நேரத்தில் பள்ளிகள் பொதுவுடமையாக்கிட வேண்டும்.   அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்திட ஆள்வோர்கள் வழிவகை செய்ய வெண்டும்.   பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க ஆர்வமிருக்கிற அதே வேளையில்.... குழந்தைகள் பாதுகாப்பையும் உன்னிப்பாக கவனிப்போம். 

மதுவை விரட்ட... தேவை மன மாற்றம்


இரண்டு மாதங்களுக்கு முன் சிறுநீரகக் கற்கள் உருவானதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். எனக்கு மாமா உறவுக்காரர் “என்ன மாப்ளே, அப்பப்ப நம்ம மருந்தை சாப்பிட்டா இப்படி வருமா? ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேணாம், பீரையையும், பிராந்தியையும் கலந்து குடிங்க, இரண்டும் உள்ள போயி முட்டி மோதி, கல்லை கரைச்சு வெளியேத்திறும்“. இது இவரு சொன்ன வைத்தியம். இதைக் கேட்டுக்கொண்டு நடக்கும் போது வழியில் இருவர் தண்ணியடிக்க வேணாம், வெட்டியா சீரழிஞ்சு போகணும் அதற்கு மற்றொருவர், இந்த மதுரையில உனக்கு எத்தன பஸ் ஓடுது! எனக்கு எத்தன பஸ் ஓடுது! ... ஒன்னுமில்ல மூ...டு போ....என்ற ஏளனப் பேச்சு, அடுத்து பேசாமல் நடந்தார். இவனெல்லாம் 1000 வருசம் வாழப்போறவன்! எங்க பங்காளி பாண்டி வருசமெல்லாம் தண்ணியடிப்பாரு, சும்மா இரும்பு மாதிரியிருக்காரு, அவ தம்பி ஒன்னுமே அனுபவிக்காதவன் நூறு வியாதியை வச்சிருக்கான்.... நீ இருடா விதைக்கு,’ இவைகள் மதுமகன்களின்

எனக்குத் தெரிந்த இரண்டு திருமண விழாவின் செலவுகளை விசாரிக்கும் போது கிடைத்த தகவல்... நன்கு படித்து பட்டம் பெற்று, பணியில் உள்ளவரின் திருமண விழாவிற்கு ரூ.40,000 மதுபானச் செலவு. அன்றாடம் சுமை தூக்கும் தொழிலாளியின் திருமண விழாவிற்கு மதுபாணச் செலவு ரூ. 25000 (இது குறைவு).  திருமணச் செலவில் 30 முதல் 40 சதவீதம் மதுவிற்கே செலவு செய்திருக்கிறார்கள். வயது வித்தியாசம் உறவு வித்தியாசம் பாராமல் குடிக்கின்றனர். மது அருந்துவது கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். டீ கடை எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் டாஸ்மார்க் கடையும் உள்ளது. டீ குடிப்பது போல் மது குடித்து மகிழ்கின்றனர்.

மருத்துவமனை போய்ச் சேராத கிராமத்தில் கூட மதுக்கடைகள் போய்ச் சேர்ந்தது நமது அரசின் சாதனை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது! மது அருந்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மதுக்கடைகளையும், மதுமூலம் வரும் வருமானத்தையும் எண்ணுவதற்கு, தனியாக ஒரு வாரியம் நியமிக்க வேண்டும். ஏழுமலையானைக் காட்டிலும் அதிகம் பேர் வந்து கொட்டுகின்ற ஒரே இடம் மதுக்கடைதான்.

பாண்டிச்சேரியில் முற்பகல் முழுக்க மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு, மாலை வீடு திரும்பும்போது கணவனுக்கு பிடித்தமான பிராண்ட் பிராந்தி வாங்கி வந்த மனைவி ஒருத்தியை நண்பர் ஒருவர் மூலம் அடையாளம் கண்டபோது, நாம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டோம் என்பது உறுத்தலாகத்தான் இருக்கின்றது. டாஸ்மார்க் மதுக்கடைகளின் வருமானத்தைக் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெறுவது ஊரறிந்த ரகசியம். மதுவை விற்பவர்களுக்கே இவ்வளவு வருவாய் என்றால் உற்பத்தி செய்பவர்களுக்கு எவ்வளவு இருக்கும் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டியது தான்.
சரக்கு வச்சிருக்கேன்... நாட்டுச் சரக்கு... இப்படி சினிமா பாட்டெல்லாம் பாடுவதற்கான காலம் மலையேறிப் போச்சு. விளையாட்டுப் போட்டிகளில் கூட விலை உயர்ந்த மதுபானங்கள் விளம்பரமாக வருவதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. நாலைஞ்சு குடும்பம் வாழ்றதுக்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் மோசமாவதை கண் கூடாகக் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

மது அருந்துபவர்களின் பட்டியல் எடுப்பது மிகச் சுலபம்.  அந்தளவிற்கு மது மகன்களின் (மது மகள்கள்) எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அரசாங்கமே கடை வச்சிருக்கு, நிறைய (நீதி நூல்கள்) படிச்சவங்க மது புட்டிகள் விக்கிறாங்க குடிக்கிறதுல மட்டும் என்ன தப்பு இருக்குன்னு நியாயம் கற்பிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.  முடியாட்சி போன்று இது குடி ஆட்சி.  ஆகையால் குடிமக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.

மது அருந்துபவர்கள் யார்? எல்லோரும்.... எல்லோரும் என்றால் இதில் விதி விலக்கில்லை. அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.  ஏழ்மையில் உள்ளோர் அதிகமாக மது அருந்துகிறார்கள்.  அதனாலேயே ஏழ்மையில் உள்ளார்கள் என்பது வேறு.  மது மகன்கள் எது குறித்தும் கவலைப்படுவதில்லை என்பது தான் கவனிக்க வேண்டியது.

எதற்கெல்லாம் மது பார்ட்டி என்று கேட்டால், மோட்டார் பைக் வாங்கினால் பார்ட்டி, அதை ஓட்டினால் பார்ட்டி, விழுந்தாள் பார்ட்டி, எழுந்தால் பார்ட்டி, ஆஸ்பத்திரிக்குப் போன கூட பார்ட்டி... இப்படி பொறந்தா பார்ட்டி. இறந்தா பார்ட்டி, இன்னும் சில ஊர்களில் ரேடியோ கட்டினா பார்ட்டி, தேர்தல் திருமணம் என எல்லா இடங்களிலும் மது உள்ளது.   சிலர் ஏங் வீட்டு விஷேசத்திற்கு தண்ணிக்குப் பதிலாக பிராந்தியைத்தான் ஊத்திக் கொடுப்பேன் என பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனர்.  பார்ட்டிகளே தினசரி இருக்கும் போது பாவம் மது மகன் என்ன செய்வான்கள். 

குழந்தைகள் பெண்கள் என எல்லோரையும் இந்த வியாதி தொற்றிக்கொண்டுள்ளது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  ஒரு தலைவருக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கூட மது அருந்தியாதாக தகவல் கேட்டு அமைதியாகத்தான் இருக்க முடிந்தது.  நாம் எங்கு இருக்கிறோம். வள்ளுவனின் குறளை வாசித்து, அதற்கு உரை எழுதி, மனனம் செய்து பிழைக்கின்றோம். குறள் படி வாழ்வதற்கு மறுக்கின்றோம். 

ஒரு சில அரசியல் அமைப்புகள் மதுவிற்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரம் செய்கின்றன. அவர்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் சமீபத்தில் மதுரையில் நடந்த மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெரும்பான்மையான வாகனங்கள் பச்சை வண்ண பலகை கொண்ட கடைகளில் நின்றிருந்தை அன்றைக்கு மதுரையில் இருந்த அனைவரும் அறிவர்.  கோவை செம்மொழி மாநாட்டிற்கு மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கவில்லை என்பதிலிருந்து மதுக்கடைகள் மருந்துக்கடைகளுக்கு இணையாக இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.

மிகக் குறைந்த விடுமுறை நாட்கள் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிறுவனம் டாஸ்மார்க் மட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்தது.  விடுமுறை விடாமல் அலுவல் நடைபெற அது என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கடைகளா!

மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் காரணியாக மட்டும் மது அமையவில்லை.  அது அன்றாடம் தேநீர் பருகுவது போன்ற ஒரு பழக்கத்தை பலரிடையே ஏற்படுத்தி விட்டது.  மதுவால் உடலுக்கு கேடு, குடி குடும்பத்தைக் கெடுக்கும் என்றெல்லாம் சொல்லி நாம் ஒன்றும் செய்துவிட முடியாது.  நமது நாடு என்னும் கப்பல் மது என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.  மீட்பதற்கு நல்ல தலைவன் வேண்டும். 

நாடு வளர்கிறது. ஆனால், நலிந்தோரின் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒரு சில குடும்பங்கள் மட்டும் வளர்வதற்கான ஒரு அரசியல் சூழலை கட்டமைப்பதை கட்டாயம் உடைத்தெறிய வேண்டும்.  இவர்களை எப்படி மாற்றுவது? மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாமே மாறக் கூடியதுதான். இதனை நம்புவோம்.  குடி ஆட்சியை மாற்றியமைக்க நாம் கதாநாயகன்களை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.  

பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்தது

ஒலி மாசை ஒழிப்போம்


அந்திமாலையும், முன்னிரவும் சந்தித்துக்கொள்கிற வேளையில், வெளியூருக்கு வினை நிமித்தமாய் சென்ற நம் சங்ககால தலைவன் (கதாநாயகன்) வினை முடிந்து வீடு திரும்பும் வேளையில், தேரின் மணியினை ஒலி எழுப்பாதவாறு தேரோடு இணைத்து நன்கு கட்டுகிறான்.  மணி இருப்பதே ஒலி எழுப்பத்தானே! பிறகு ஏன் இப்படிச் செய்கிறான்.  நாயகன் நாயகியை காணச் செல்கிற வழியில் வண்டுகள் தன் இணையோடு கூடி மகிழும்.  தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்து பிரிந்துவிடக்கூடும் என்று   நாயகியை பிரிந்திருந்த நம் நாயகன் நினைத்தான்.  அதனாலேயே தேர்மணியை இறுக்கக் கட்டினான்.  அவன் இதயத்தில் எவ்வளவு காதல்... இல்லாள் மீதும், இவணுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத வண்டுகள் மீதும்... அன்பு மிகுந்தவர்களிடம் அக்கறை அதிகமாக இருந்ததை அகநானூறு சொன்னது.  ஆனால்,

இன்று... காதலியை காண இரண்டு சக்கர வாகனத்தில் போகிறவர்கள் எழுப்பும் ஒலி செவிப்பறையைக் கிழிக்கிறது.  பேருந்துகளின் ஒலி எழுப்பானில் இருந்து வருகிற இரைச்சல் காதை அதிர வைக்கிறது. அதிலும் சில தனியார் பேருந்துகள் விதவிதமான வடிவில் ஒலி எழுப்பானில் இருந்து ஒலியை எழுப்பி முன்னே செல்பருக்கு பயத்தை உண்டாக்குகிறார்கள். நமது முன்னேற்றத்தின் மைல்கல்லாய் அமைந்த ஒவ்வொரு வாகனமும் தருகிற இரைச்சல் ஒலி மாசை ஏற்படுத்துகின்றன. இந்த ஒலி மாசு மனதிற்கு ஒவ்வாத இரைச்சலை ஒலித்து உயிரினங்களின் வாழ்க்கை முறைகளையே மாற்றியமைக்கின்றன. 

ஒலி மாசால் உடல் நலத்தில் பாதிப்பு, மனஉளைச்சல், உடல் சோர்வு, கோபம், மன அழுத்தம், கேட்கும் திறனில் குறைபாடு, தூக்கமின்மை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... இவை நாம் தேடித் தேடி பிடித்து பழக்கிக்கொண்டதுதான்.....
நம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக் கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம் அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது. ஆயுதபூஜை வந்தால் போதும்... வீதிகள் தோறும் ஒலி பெருக்கி.... வீதிக்குள் 100 மீட்டர் இடைவெளியில் ஒலி பெருக்கி... ஆயுத பூஜையை நம் தொழிலுக்கு உதவுகிற ஆயுதங்களுக்கு செய்யாமல், நமக்கு ஆப்பு வைத்துக்கொள்வது தகுதியான செயலாகுமா?  அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்களுக்கு பிறந்த நாள் வந்துவிடக் கூடாது, கூடாதா ஒலி பெருக்கிகள் மனிதர்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் கூடி பாதகம் செய்யாதவர்களையெல்லாம் பாதிப்புள்ளாக்கும்.... இவர்களை நெறிபடுத்த நிர்வாகத்தால் இயலவில்லை.... ஏன்? இவர்களை ஆட்சியாளர்கள்  அல்லவா நிர்வகிக்கிறார்கள்..... கைக்கெட்டும் தூரத்தில் ஒலி பெருக்கி அமைப்பதை ஏன் அனுமதிக்க வேண்டும்? காது கேட்கும் தூரம் வரை என அளவு வைத்துக்கொள்ளலாமே!  அறியாமாலா செய்கிறார்கள்.... ஆணவத்தில்.... அதிகாரத்தில்....
வெடிவெடிப்பது.... காசை கரியாக்கி, ஓசையை நோயாக்கும் உபத்திர செயல்.  கோவில் திருவிழா, தலைவர்கள் வருகை, தாய்மாமன் சீர் இப்படி காதுகுத்துவதில் தொடங்கி, பெண் பார்க்கப் போகிற படலம் வரை வெடி வெடித்து, அதிலும் சத்தம் அதிகம் வரக்கூடிய வெடிகளை வெடித்து, சந்ததியை சாகடிக்கின்றனர்.  உசிலம்பட்டிக்கு அருகில் சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில் வெடி வெடித்த இளைஞர் இறந்த செய்தி கேட்டபோது இதயம் வலித்தது.  யாருடைய சந்தோசத்திற்கு இந்த வெடி... பறவைகளுக்காக தீபாவளியன்று கூட வெடிப்பதை மறந்த கிராமங்கள் இருக்குற நமது மண்ணில் மனிதர்களின் உயிர் மீது இவ்வளவு அக்கறையின்மை அவமானப்படவைக்கிறது.  வெடி, ஒலி மாசுபாடோடு  மட்டும் நின்றுவிடுவதில்லை, அது காற்று நிலம் என நீளும்.... வாழ்வின் சந்தோசம் பிழைப்பு நோக்கி இருக்க வேண்டுமேயொலிய இறப்பை நோக்கியல்ல....
ஒலிகளின் காலம் எனப்பேசுமளவிற்கு தற்போது நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற களங்களின் எண்ணிக்கையும், சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது.
ஒலியளவு அதிகரித்துள்ள வாழ்விடங்களில் பெரும்பாலோனருக்கு நரம்புத்தளர்ச்சி, இதய நோய் பாதிப்புகள் பரவியுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.  தொடர்ச்சியான இரைச்சல் மனித இறப்புக்கு வித்திடும் என்ற எச்சரிக்கை இரைச்சலின் ஆபத்தை நமக்கு உணர்த்துகிறது.
அலைபேசியில் அதிகம் நேரம் பேசினால் காதுகளின் திரைகளுக்கும், நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று  அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.  அலைபேசி பயன்படுத்துவோர்களே இதனை உணர முடியும்.  அடுத்தவர் சொல்லி அறிந்து கொள்ள வேண்டியதில்லை. அலைபேசிகளில் பேசுவோர் சிக்னல் கிடைக்கவில்லையென சில சமயங்களில் அவருக்கு கேட்குமளவிற்கு சத்தம் போடுவர்.  அதிக சப்தம் காது சவ்வை கிழித்து ரத்த போக்கை கூட ஏற்படுத்தும்.  ஒரு மனிதன் 30 முதல் 50 டெசிபல் அளவு சப்பத்தை கேட்களாலம்.  அதற்கு அதிமாக கேட்கும் போது உடல், உள்ள அளவில் பாதிப்பு ஏற்படும். 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செவித்திறன் குறைபாடு அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.  பஞ்சாலைகளில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கும் இது போன்ற குறைபாடு உள்ளதை காண முடிகிறது.  இவைகளெல்லாம் அதிக அளவிளான சத்தத்தை கேட்பதால் ஏற்பட்ட குறைபாடு ஆகும்.
வாகனங்களில் பயன்படுத்தப்படுகிற மின்னனு காற்று ஒலிப்பான்கள் அதிக டெசிபல் அளவுள்ள ஒலியைக் கொடுத்து சூழலைக் கெடுக்கின்றன. இது போன்ற காற்று ஒலிப்பான்களை தடைசெய்வதில் ஆளும் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இச் செயல் வாழும் குடிகளின் வசந்தத்திற்கு வழிவகுக்கும்.
இயற்கை வளங்கள் பொதுச்சொத்து.  இயற்கையை பேணுகின்ற சூழல் மேம்பாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும் பங்கெடுத்து சூழலை மேம்படுத்துவது அவசியமாகும்.  துறைசார் வல்லுநர்கள் சாலையோரங்களில் மரங்கள் வைப்பது மேம்பாட்டிற்கான வழிகளில் ஒன்று என்கின்றனர். ஒலி மாசுக்கும் சூழலுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுவது நியாமானதுதான். 
ஒலி மாசு மனிதனோடு நின்றுவிடுவதில்லை.  இப்புவியில் வாழும் இயற்கையைப் பேணும் உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  குறிப்பாக பறவை இனங்களை பெரிதும் பாதிக்கிறது.  இயற்கை இன்னும் இருக்கிற இடங்களுக்கு சுற்றுலா செல்கிறேன், எனது சுதந்திரம் எனும் பேர்வழிகள் அங்கும் ஒலி மாசை ஏற்படுத்துகிறார்கள். விளைவு  அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
ஒலி மாசை குறைக்க என்னதான் செய்வது?  நம் வீடுகளில் காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள் என்றும், கதவை ஆட்டினால் வீட்டில் சண்டை வரும் என்றும் பெரியவர்கள் குழந்தைகளிடம் சொல்வதை கேட்டதுண்டு. கதவை ஆட்டுகின்ற குழந்தைகளை பெரியவர்கள் திட்டுவதுமுண்டு. கதவை ஆட்டினால் சண்டை வருமா? வரும். கதவுகளை அசைக்கும் போது அதிலிருந்து ஒலி எழும்.  அந்த ஒலி மனதில் எரிச்சலை ஏற்படுத்தும்.  எரிச்சல் சண்டையில் கொண்டு வந்துவிடும்.  எனவே, நம் முன்னோர்கள் மிகை ஒலிகைளை தவிர்க்க அவர்கள் கெட்டியாக பிடிக்கக் கூடிய காரணங்களைச் சொல்லி தடைசெய்து வைத்திருந்தனர்.   மனிதன் கெட்டியாகப் பிடித்து பின்பற்றக் கூடிய வழிகளை கற்றுத் தருவது காலத்தின் கட்டாயம்.  நாம் வாழும் புவியை நமதாக்கிக் கொள்ள சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது தனிமனிதக் கடமை.  ஒலி மாசை குறைக்க உள்ளுக்குள் இருக்கும் போலி கதாநாயகத்தன்மையை குறைத்திடுவோம்.
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்தது...