Friday, May 27, 2011

அப்பா நான் பாஸாயிட்டேன்



அடுப்பு வேலையில அம்மாவுக்கு ஒத்தாசை செஞ்சு
அண்ணன் ஜீன்சை துவைச்சு அயன் பன்னி
அரைப்பரிட்சை லீவுல தோட்ட வேலை பாத்து
அப்பா நான் பாஸாயிட்டேன்

பள்ளிக் கூடத்திலேயே மூனாவது மார்க்
மொத மார்க் வாங்குன 
முத்துலட்சுமிக்கும் எனக்கும்
மூனு மார்க் வித்தியாசம்

முத்துலட்சுமி டாக்டருக்கு படிக்கப் போகுதாம்
ரெண்டாம் மார்க் வாங்குன ஜான் எஞ்சினியருக்கும
எனக்கப்புறம் இருக்கும் நளினி நர்சுக்கு படிக்கப் போகையிலே...
நான் என்ன படிக்கப்பா...?

சித்தப்பா சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போதே
ஆடு மேச்சதா அப்பத்தா சொல்லுச்சு
பக்கத்தூரு கவர்மெண்ட் கலேசுலயாவது 
என்னையும் சேர்த்து விடு...
அப்படியே ரெண்டு ஆட்டு குட்டியும் வாங்கிக் கொடு...

நான் கலெக்டர் ஆகனும்ப்பா - அதுக்கு
ஒரு பட்டப் படிப்பு வேணும்ப்பா
கலேஜ் சேருவதற்கு கரிசனம் காட்டுப்பா
கலெக்டர் மகள்ன்னு காலர தூக்கலாம்ப்பா

ஆடு மேய்சசு ஆட்சியர் ஆனது 
வார மாத இதழ்களில் படத்தோட வரும்
அம்மா அப்பா இனிப்பு கொடுத்தது 
அடுத்தடுத்த பககத்தில் கலர்புல்லா வரும்
அப்பா நான் பாஸாயிட்டேன்...

Tuesday, May 24, 2011

திருந்தட்டும்...



2ஜி அலைக்கற்றை ஸபெக்டரம்  ஊழல்ன்னு சொல்லறாங்களே அது என்னடா கண்ணா?ன்னு எங்க அப்பா விசாரித்தார்.  நானும், நம்ம ஊர்ல திருவிழா முடிஞ்சதும், கோவில் பந்தல்ல நேர்த்திக் கடன்,  திருவிழா செலவு போக மிச்சமான பணத்தை ஏலம் விடுவாங்கள்ல, அப்ப 10 ரூவா பொருளை 15 ரூவாய்க்கு எடுப்பாங்க, சில சமயம் 10 ரூவா பொருளை 9 ரூபாய்க்கும் எடுப்பாங்க. இந்தப் பணத்தை இந்த தேதிக்குள்ள கட்டனும் சொல்லுவாங்க. இது மாதிரித்தான் அரசாங்கம் செல்போன் பேசறது சம்மந்தமா  தனியாருக்கு ஒதுக்குனதுல நியாயமா நடந்துக்குல, அதனால அரசாங்கத்துக்கு இவ்வளவு இழப்புன்னு தலைமை கணக்காயம் சொல்லுதுண்ணேன். 

ஏம்ப்பா நம்ம ஊர்ல இது மாதிரி எதுவுமுன்னு..... கேள்வியை முடிப்பதற்கு முன்னே.. நீ பொறக்குறதுக்கு முன்னாடி நம்ம ஊரு பெரியதனக்காரர் வீட்டுல (அப்ப குச்சு வீடு) நல்ல மத்தியானத்துல  குச்சு மேல இருக்குற கூரை மட்டும் எரிஞ்சுச்சு, அப்ப ஊறே போயி தண்ணிய ஊத்தினோம்.  என்னான்னு விசாரிச்சா மொதநாளு பஞ்சாயத்துல வாங்குன தெண்டம் ரெண்டா ரூபாயை கோவிலுக்கு விளக்குப் போட எண்ணை வாங்கமா வீட்டுலேயே வச்சிருந்தாராம். எரிந்து காட்டிக்கொடுத்தது. பிறகு முதல் வேலையா எண்ணை வாங்கிட்டுதான் கூரை மேயிற வேலையையே பார்த்தாத எங்க அப்பா சொன்ன போது உடம்பு சிலிர்த்தது. கூரை எரிந்தது எப்படி நடந்ததோ ஆனால், அந்தக் குடும்பம் இன்றுவரை நேர்பட வாழ அந்தச் சம்பவம்தான் வழிவகுத்திருக்கும் எனக் கருதுகிறேன்.

பொது வாழ்வு மற்றும் அரசுப் பணி இரண்டிலும் லஞ்சம் ஊழல் என்ற இரண்டும்  இரண்டறக் கலந்துவிட்டன. வருவாய்த்துறை அலுவலகங்களில் நான் இன்ன சாதிக்காரன், என் மகனும் இன்ன சாதிக்காரன், நான் இந்த ஊரில் வசிக்கிறேன், பிறப்பு இறப்பு என சின்னச் சின்ன வேலைகளுக்குக் கூட லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வழக்கமாகிவிட்டது. இலவசத் திட்டங்கள் கையூட்டை ஊக்குவிக்கின்றன. இலவசங்கள் உரிய நபர்கள் பெறும் போது கூட கையூட்டு கொடுக்கின்ற அவல நிலை. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் சாமனியர்கள். அப்புறம் மெகா ஊழல்களில் சாமனியர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.  இதனை பிற்பகுதியில் பார்ப்போம். இப்படி ஊதியம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் கையூட்டு பெறுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுவதே கையூட்டுப் பெறுவோருக்கு சுதந்திரமாகிறது. இவர்கள் இப்படி இருக்க பொது வாழ்விற்கு வந்தவர்கள் நிலையோ தொட்டுத் தொடரும் ஊழல் பாரம்பரிமாக...

1948ல் பிரிட்டனில் இருந்து ஜிப் வாங்கியதில் குற்றம்சாட்டப்பட்டவர் அன்றைய இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷணமேணன். பின்னர் 1957ல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷணமாச்சாரி (இவரை சமீபத்தில் நமது முன்னால் முதல்வர் (கருநாநிதி )கூட முந்ரா ஊழல் என கோடிட்டு காட்டினார்) வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் விற்பனை நடந்த ஊழலுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு.  இவர்களைப் போலவே ஊழலுக்குத் துணை நின்ற பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப் சிங், மராட்டிய முதல்வர் ஏ.ஆர். அந்துலே போன்றோர்கள் முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்கள்.

மீணடும் நடுவண் அரசிற்கு வருவோம்.  நாட்டின் பாதுகாப்பிற்கு வாங்கப்பட்ட பீரங்கிகளில் ஊழல் நடந்ததாக மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மீது ஊழல் புகார் வெளிவந்தது. இதனால் 1989ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்புறம் பி. வி. நரசிம்ராவ் காலத்திலும் ஊழல் தொடர்ந்தது. ஊறுகாய்க் கம்பெனிக்காரிடம் காசு வாங்கியதாக ராவும் சாமியும் சிக்கினர். இது மட்டுமில்லாமல் யூரியா ஊழல் வேறு. இதே சமயத்தில் இன்னொரு பெரும் ஊழல் ஹர்சத்மேத்தாவின் பத்திர ஊழல்.

கார்க்கில் இராணுவ வீரர்களுக்கு வீடு ஒதுக்குவதில் மராட்டிய மாநில முதல்வர். பதவி விலகியுள்ளார்.  இவர்கள் பொது வாழ்விற்கு வந்தார்களா? வேறு எதற்கும் வந்தார்களா?

இராணுவத்தில் தொடங்கி பத்திரம், யூரியா, வீடு, சிமெண்ட், தீவனம், நிலம் ஒதுக்குவது, மேம்பாலம், சுடுகாட்டில், சவப்பெட்டி செய்வதில், உணவுக் எண்ணெய் திட்டத்தில், அலைக்கற்றை, மணல், ஐபிஎல், காமென் வெல்த் போட்டி என எல்லாத் துறைகளிலும் காமனாக இருப்பது ஊழல் ஒன்றுதான். லட்சத்தில் தொடங்கிய ஊழல் லட்சம் கோடிகள் வரை வந்து நிற்கிறது. ஊழல்கறைபடிந்தவர்களின் கைநழுவிப் போனது பதவி மட்டும் தான். இது பொது வாழ்வில் இருந்தவர்களுக்கும் அரசுப் பணியில் இருந்தவர்களுக்கும் பொருந்தும்.

இவர்கள் எல்லாம் இப்படி இருக்கையில்.... கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். இதே கிராமத்தில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  பொருளாளருக்கு உரிய அத்தணை பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்த உன்னதமான பொருளாளர்.  இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.  திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று ஒதுங்கிக் கொள்வார். கிராமக் கணக்கிற்கு தனிப் பையும், தனது சொந்த பணத்திற்கு தனிப் பையும் வைத்து கணக்காய் இருந்தவர்.  வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கணக்கு ஒப்படைக்கும் நாளில் மது மகன் ஒருவன் போதையில் வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி 'எல்லாம் கிராமத்துப் பணம் தான்' ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (வருடக் கணக்கில் விவாதிக்க வில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஒப்படைத்தார். அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் 'அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒழறிட்டான்' எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. குற்றம் சுமத்தியவனும் நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமுன்னு கால்ல விழுந்தான். இருந்தும் சம்மதிக்கவில்லை. நீ சந்தேகப் படும்படி ஏதோ ஒரு செயல் உணக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.  இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் உதிர்த்த வார்த்தைகள்... நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்.) இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.

இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர். நான் என்றோ படித்த ஒரு ஏழையோ, மாடு மேய்ப்பவனோ எளிதாக பொய் சொல்ல மாட்டான் என்பது தான் இப்போது நினைவுக்கு வருகிறது. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள்.

பொதுப் பணியிலும் பதவியிலும் இருப்பவர்களின் ஊழல் துளியாய் தொடங்கி சமுத்திரமாக விரிந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? இதனால் யாருக்கு பாதிப்பு? இரண்டு கேள்விகளுக்கும் முதல் பதில் நாம். யார் செய்யலை என சட்டைசெய்யாமல் இருந்து விடுகிறோம்.  நீங்கள் உத்தமர் தான என்ற கேள்வியை விட அவர் உத்தமராக இருக்க நாம் என்ன செய்யப் போகிறோம். ஊழலை தோலுரித்துக் காட்டுகின்ற பணியை ஊடகங்கள் செய்கின்றன.(இதில் முன் பின் வேறு உண்டு) நாம் தெரிந்து கொள்கிறோம். தெரிந்தும் இராமேஸவரம் வங்கக் கடல்போல் அமைதியாக இருக்கிறோம்.

தேசத்தின் வளத்தை ஒரு கூட்டம் சுரண்டிக் கொண்டிருக்கு போது சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கவில்லை எனும் போது வேதனை. தேசத்தின் மொத்த மக்கள் தொகையில்  பாதிப் பேருக்குத்தான் தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றனவாம். வறட்சியால் வாடுகிறோம என்ற வருத்தத்தை விட
, நல்ல மழை வந்தால் வீடுகள் நீரில் முழ்குவதையும், போக்குவரத்து தடைபடுவதையும் நாம் கண்கூடப் பார்க்கும் போது மிகுந்த கவலை. இது எப்படி நடக்கிறது, கையூட்டுப் பெற்றுக்கொண்டு ஏரிகளை பட்டாப் போட்டுக்கொடுத்த பகவானின் செயலால். ஊழல் வாதிகளால் நமது அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றும் தொய்வடைகிறது.

கல்வி தொடர்பானவைகளிலும் ஊழல் பெருகியிருக்கிறது.  இதனால் பெருவாரியான கல்விக் கட்டணங்கள்... ஏழை மானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு தரமான நோய்த்தடுப்புமருந்துகள் சென்று சேர்ந்திருக்கிறதென்றால் அதிலும் பாதிக்கு மேல் இல்லை. அடிப்படை வசதி இல்லாமல் நாடு தேங்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால், நிதி, நீதி, நிர்வாகம் மூன்றும் ஊழல் பேர்வழிகளின் கைகளில் கட்டுண்டு கிடக்கிறது. இது மாற வேண்டும். இல்லை மாற்ற வேண்டும்.
ஊழல் வளர்ச்சியை, அடிப்படைத் தேவைகளை தடுக்கின்ற காரணி.  ஆகையால் நாம் ஊழலைத் தடுத்திட வேண்டும்.  தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதிருந்தே நம்மால் முடிந்ததை செய்வோம். அது... கொடுக்கவும் வேண்டாம்! வாங்கவும் வேண்டம்! என்ற முடிவு.

தன் மகன் உணவைத் திருடி உண்டான் எண்பதற்காக ஒரு தாய் தற்கொலை செய்து கொண்டாலாம். தேச நலனையே தன் நலன் என பதவிக்கு, பணிக்கு வந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சாராரை (ஊழல் வாதிகளை)  சாகச் சொல்ல வில்லை திருந்தச் சொல்கிறோம். நீங்கள் வருந்தி திருந்தும் போது சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு போன்றவை வளரும். உமது சொந்த பந்தங்களும் வளமோடு வாழ்வார்கள்.

எண்டோசல்பானுக்கு முடிவு எப்போ




என்னுடைய சிறுவயதில் எங்கள் கிராமத்திற்கு எக்காலக்ஸ் எண்டோசல்பான் விளம்பர வாகனங்கள்  “மாவீரன் வந்தானே வந்தானே புழு பூச்சிகளை ஒழித்தானே“ என முழக்கமிட்டு வரும்.  இந்த வாகனங்களை பின்தொடர்ந்து சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். அவர்கள் தூக்கி எறிகிற துண்டு பிரசுரங்களை ஓடி ஒடி எடுப்போம். வாகனங்களை பின்தொடரந்து ஓடி காயம்பட்டவர்கள் நிறைய பேர்.  வீட்டிற்கு வந்ததும் எங்களது பெற்றோர்கள் ஏன் பின் தொடர்ந்து சென்றீர்கள் என்று வசையோடு பிரம்படியும் தண்டணையாக தருவார்கள்.  வண்டிக்கு பின்னால் சென்ற எங்களுக்கு அன்றே தண்டனை கிடைத்தது.  இந்த மருந்து கம்பெனிகளின் பின்னால் சென்ற எங்களது பெற்றோர்களுக்கு...

வீட்டுச் சாம்பல், வேப்ப எண்ணெய், பிண்ணாக்கு, தழைகள் போன்றவற்றை பூச்சி விரட்டியாய் பயன்படுத்திய எங்களது முன்னோர்களின் முறைகளை விட்டுவிட்டு என் தந்தை தலைமுறைதான் இந்த மருந்து கம்பெனிகளுக்கு காந்தி பணத்தால் கம்பளம் விரித்து வரவேற்று தனதாக்கியது.  ஒரிரு வருடத்திலேயே கடனாளியாகி விவசாயம் செய்யவது கஷடம் நீங்க எல்லாம் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போங்க என்று எங்களை மாற்றிவிட்டார்கள்.  ஆனால் அவர்களிடம் மாற்றம் இன்னும் வந்தபாடில்லை.

எண்டோசல்பான் பூச்சிமருந்துக்கு தேச முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் பெரும் திரளான மக்கள் உண்ணாவிரதப் போரட்டம் சமீபத்தில் நடத்தினர்.  எண்டோசல்பானை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.  இந்த அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கு 63 நாடுகள் ஏற்கெனவே தடைவிதித்துள்ளன. உலக நாடுகள் தடை விதித்துள்ள பூச்சிக்கொல்லி மருந்து அப்படி என்ன செய்கிறது. அந்த எண்டோசல்பான் தான் என்ன?

எண்டோசல்பான் என்பது ஒரு வகையான பூச்சிக்கொல்லி மருந்து. காய்கறிகள், பழங்கள், பருத்தி போன்ற பல்வேறு வகையான செடிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.  எண்டோசல்பான் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை மட்டும் அழிக்காது.  அது எல்லா வகையான பூச்சிகளையும் பாதிக்கும், அழிக்கும்.  பட்டாம்பூச்சிகள், மண்புழுக்கள், தேனீக்கள், எறும்புகள் மற்றும் சிலந்திகள் என எல்லா வகையான புழு, பூச்சிகளையும் அழிக்கும்.  எண்டோசல்பான் அளவு அதிகமாகும்போது தவளைகள், பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் என அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும்.   இம்மருந்த்தின் அளவு அதிகமானால் உயிரைக் கொல்லும் அளவுக்கு அபாயகரமானது.  கேரள மாநிலத்தில் எண்டோசல்பானால், குரங்குகள், நாய்கள் இறந்து போன செய்திகள் இவ்வுண்மைக்கு ஆதாரம்.  மேலும், ஆடு, மாடுகள் ஈனும் குட்டிகள் கை கால்கள் பின்னிப் பிணைந்தும், குறைபாடுகளுடனும் பிறந்துள்ளன.

மனிதனுக்கும் எண்டோசல்பான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றது.  முக்கியமாக, கர்ப்பினி பெண்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  அதிக அளவிலான மற்றும் எண்டோசல்பான் நெடுங்காலமாக நுகர்தல் காரணமாக, மன நல வளர்ச்சியின்மை, மன நல குறைபாடு, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுடன் பிறத்தல் போன்ற விளைவுகள் எண்டோசல்பானால் ஏற்படும் என்பதைப் பல ஆதாரங்கள் நிருபீக்கின்றன.  நமது அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நம் கண் முன்னே பெண்கள் இளம் வயதிலேயே (பத்துப்பனிரெண்டு வயதில்) பூப்பெய்வதை பார்க்க முடிகிறது.  இதற்கு எண்டோசல்பானும் ஒரு காரணம். ஆண்களுக்கு நேர்மாறாக பாலியல் முதிர்ச்சியடைய நீண்ட நாட்கள் ஆவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

எண்டோசல்பான் மரபணுக்களை மாற்றக்கூடிய வல்லமை கொண்டது என அறிந்தோர் கூறுகின்றனர்.  டெரடோஜென் என சொல்லக்கூடியவை பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன், நோயுடன் பிறக்க வைக்கிறது.  இந்த எண்டோசல்பான் குறித்து அறிவியல் முறைப்படி ஆய்ந்து பார்க்க அரசாங்கம் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய ஒன்று.  இந்த எண்டோசல்பானை பயன்படுத்தும் எங்களது விவசாய குடும்பங்களுக்கு இது தரும் தீமையான விளைவுகளை அவ்வளவு எளிதில் புரியவைக்க முடியவில்லை. அதனால் இவ்வளவு தீமைவிளைக்கும் எண்டோசல்பானை தடைசெய்யுங்கள். எங்கள் விவசாயிகள் மாறிவிடுவார்கள்.

கடுமையான பாதிப்பபை விளைவிக்கும் எண்டோசல்பான் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள். மிக சுலபமாக காற்றில் கலந்து விடும். எண்டோசல்பான் கலந்த காற்றை சுவாசிக்கக் கூடிய எறுப்பில் தொடங்கி யானை வரை, மனிதர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.  இப்பூச்சிக்கொல்லி மருந்து 150 நாட்களுக்கும் மேலாக அழியாமல் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ள இடங்களில் மழைபெய்தால், மழை நீரிலும் எண்டோசல்பான் கலந்துவிடும்.  மழைநீர் மக்கள் பயன்படுத்தும் ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல் என எல்லா இடங்களுக்கும் பாய்ந்து செல்லும்.  இந்நீரைக்குடிக்கும் உயிரினங்கள் எண்டோசல்பானின் உட்செல்லும். எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் இறந்த பூச்சி புழுக்களை பறவைகள் உண்டால் பறவைகளுக்கும் எண்டோசல்பான் போகும்.  அந்தப் பறைவயை மனிதன் சாப்பிட்டால் மனிதனுக்குள்ளும் எண்டோசல்பான் போவான்.  இப்படி இது சங்கிலித் தொடர் போல் சுற்றி சுற்றி வரும்.  அப்போ இதை தடைசெய்ய வேண்டாமா?

இறைவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பார்கள்.  அது போலத்தான் எண்டோசல்பானும் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.  விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் பனி துவர பிரதேசங்களான ஆர்டிக், அண்டார்டிகா முதல் அலாஸகா வரை எண்டோசல்பான் நிறைந்திருக்கிறது.  பதினைந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் பெண்களின் தாய்ப்பாலை பரிசோதித்துப் பார்க்கையில் எண்டோசல்பான் இருப்பது தெரியவந்துள்ளது.  மனிதனின் இரத்தத்திலும், பறவைகள் ஊர்வன என அனைத்து வகையான உயிரினங்களிலும் சதைகள் மற்றும் இரத்தத்திலும் எண்டோசல்பான் வியாபித்துள்ளது.

கேரளாவில் முத்தளமடா, ஸ்வாக் போன்ற இடங்களில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து ஹெலிகாப்டம் மூலம் மாம்பழத் தோட்டங்களில் தெளிக்கப்பட்டது.  அப்பகுதியில் அதிக அளவிலான நோய்கள், சிறுவர், சிறுமியர் மன வளர்ச்சி குறைபாடு, மன நல குறைபாடு, நம்பு மண்டல பாதிப்புகளால் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அனைவராலும் கவனம் பெற்றது.  கேரள உயர் நீதி மன்றம் 2005ல் தடை செய்ய உத்தரவிட கேரள அரசாங்கம் தடை  செய்தது.  ஆனால், எண்டோசல்பானுக்கு தமிழகத்தில் தடை இல்லை.  பின்ன என்ன? பால், காய்கறிகள், மாடுகள் நேரிடையாக போக, அரிசியைப் போல கள்ளச் சந்தையில் எண்டோசல்பான் கேரளவிற்கு பேயாய் போகிறது.

2010ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் பன்னாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் தடை செய்ய ஆதரவு அளித்த போதும் இந்தியா தடை செய்ய இணங்கவில்லை.  எண்டோசல்பானை அதிக அளவில் கொள்முதல் செய்யக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இன்று எண்டோசல்பான் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.  வளர்ந்த நாடுகள் அவர்கள் உற்பத்தி செய்யும் புதிய வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை (லிட்டர் ரூ. 2000 லிருந்து ரூ. 13000 வரை) வாங்க வைப்பதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் (லிட்டர் ரூ. 286)  எண்டோசல்பானை தடைசெய்யச் சொல்கிறார்கள் என ஒரு சாரார் விளக்கம் தருகின்றனர்.

எண்டோசல்பானால் இந்தியாவில் பாதிப்பு இருப்பது உண்மை.  இரண்டு மாநில முதலமைச்சர்கள் குரல் கொடுத்த போதும் எண்டோசல்பானை தடை செய்ய மத்திய அரசாங்கள் தயங்குவது தான் ஏன் என்று தெரியவில்லை. விரைவாக தடை செய்ய வேண்டும் என்பதுதான் இதயங்களை நேசிக்கும் இயற்கை ஆர்வலர்களின் விருப்பம்.  நமது ஊர் விவசாயிகள் வெளிநாட்டு பூச்சிக்கொல்லிகளை விரட்டி, நமது உள்ளூர் பண்டைய தொழில் நுட்பமான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தும் போது நாடும் நாமும் நலம் பெறுவோம்.

(2011 மே பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் இதழில் வெளிவந்தது)

Wednesday, May 4, 2011

சில கொள் சில கொல்



அன்பு கொள்                       அகந்தை கொல்

ஆனந்தம் கொள்              ஆனவம் கொல்

இசை கொள்                        இம்சை கொல்

ஈகை கொள்                           ஈகம் (இச்சை) கொல்

உண்மை கொள்                        உரந்தை (துன்பம்) கொல்

ஊக்குவித்தல் கொள்                ஊழல் கொல்

எஃகம் (கூர்மை) கொள்      எகத்தாளம் கொல்

ஏற்றம் கொள்                                     ஏமாற்றம் கொல்

ஐக்கியம் கொள்                         ஐயுறவு கொல்

ஒற்றுமை கொள்                         ஒஃகுதல் (பின்வாங்குதல்) கொல்

ஓதுதல் கொள்                                 ஓரவஞ்சனை கொல்

ஓளசித்தியம் (தகுதி) கொள்           ஔவியம் (பொறாமை) கொல்

Tuesday, May 3, 2011

கோடையில் கோவிலுக்கு

கோடையில் கோவிலுக்கு


ஏப்ரலில் மாணவர்களுக்கு தேர்வும், தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலும் நடைபெற்று முடிய இருக்கிறது. ஏப்ரல் இறுதி தொடங்கி மே இறுதி வரை நமது குழந்தைகளுக்கு விடுமுறையும் வரப்போகிறது. காலை கண் விழிப்பில் தொடங்கி இரவு தூங்கும் வரை குழந்தைகள் என்ன பாடுபடுகிறார்கள். குழந்தைகளின் இயந்திரத்தனமாக வாழ்க்கையிலிருந்து சின்ன விடுதலை வெள்ளையர்கள் நமக்கு விட்டுச் சென்ற இந்த ஏப்ரல் மே மாத விடுமுறை தான்.

குழந்தைப் பருவமும் கோடைகால விடுமுறையும் ''போனால் வராது பொழுதுபோன கிடைக்காது'' என்பதைப் போல அரிதான ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த விடுமுறையை எப்படி களி(ழி)ப்பது என்று இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இடத்தை அறிமுகம் செய்கிறேன். தமிழகத்தில் இருக்கிற சுதேசி நதிகளில் ஜிவநதியாய் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி மட்டுமே. இந்த நதியோடு உறவாடும் மாவட்டம் திருநெல்வேலி. அல்வாவிற்கு பெயர்பெற்றுத் தந்த திருநெல்வேலியைச் சுற்றி சுற்றிவர ஏரளாமான பகுதி தாரளமாக இருக்கிறது. அணைகள், அருவிகள், ஆறுகள், மேற்குதொடர்ச்சி மலைகள் இயற்கை எழிலை கண்களுக்குத் தர, ஆலயங்கள் பல அருளைத் தருகின்றன.


பலரும் அறிந்திட்ட பாபநாசம் பானர்தீர்த்தம், அகத்தியர் அருவி, குற்றாலத்திற்கு பெருமை சேர்க்கும் பல அருவிகள், தாமிரபரணி அணை, மணிமுத்தாறு அணை, தென்காசி, நெல்லையப்பர் இப்படி சொல்லிக் கொண்டே போக பல இடங்கள். இவைகளில் இன்னொரு இடம் திருப்புடைமருதூர். பெயரிலேயே மரியாதை கொண்ட இவ்வூர் திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சேரன்மாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் சாலையில் வீரவநல்லூர் வந்து, அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் வடக்கு நோக்கி வந்தால் சிவபெருமான் சுயம்புவாய் அவதரித்துள்ள திருப்புடைமருதூருக்கு வரலாம். இங்கிருந்து மூக்கூடலும் மூன்று நான்கு கிலோ மீட்டர் தான்.

அப்படி என்ன தான் இருக்கு திருப்புடைமருதூரில் என்ற கேள்வி எழும்? நியாயம் தான். இங்குள்ள கோவிலின் தல வரலாறு பார்ப்போம். ஒரு சமயம் சிவனிடம் தேவாதி தேவர்கள் அனைவரும் காசிக்கு ஒப்பான தலத்தைக் காட்டுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவன், பிரம்மதண்டத்தை தரையில் இடும்படிக் கூறினார். அதன்படி, அவர்கள் பிரம்மதண்டததை இடவே, அது தாமிரபரணி ஆற்றை அடைந்து திருப்புடைமருதூரில் தற்போது தலம் வீற்றிருக்கும் பகுதிக்கு அருகே கரையில் ஏறி நின்றது. பிரம்மதண்டம் நின்ற இடமே காசிக்கு ஒப்பான தலம் என சிவன் கூறவே, இவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பிரம்மதண்டத்தை பூஜை செய்து சிவனது அருளைப் பெற்றனர். பிற்காலத்தில், இப்பகுதியை வீரமார்த்தாண்ட மன்னர் ஆட்சி செய்து வந்த போது மருதமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இங்கு வேட்டைக்கு வந்தார். மான் ஒன்றினை கண்ட மன்னன் அதனை தனது அம்பினால் வீழ்த்தினார். அம்பினால் காயம்பட்ட மான் அங்கிருந்து தப்பி ஓடி ஓர் மருதமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்தது. மானை மீட்க அம்மருதமரத்தை வெட்டும்படி மன்னர் உத்தரவிட்டார். அதன்படி, சேவகர்கள் கோடரியால் மரத்தை வெட்டவே அவ்விடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. பின் மன்னர் அவ்விடத்தில் பார்த்தபோது தலையில் கோடரியால் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் இருந்தது. மான் வடிவில் வந்து அருள்புரிந்தது சிவன்தான் என அசரீரி கேட்கப்பெற மன்னர், அவரது உத்தரவுப்படி இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டார். ஆக இத்தலம் அமைக்ப்பெற்று சுமார் ஆயிரம் ஆண்டுகளாகப் போகிறது.


இத்தலத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளது. ஒரு முறை சிவபக்தரான கரூவூர் சித்தர் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது, ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றைக்கடக்க முடியாத அவர், அக்கரையில் இருந்து கொண்டே தென்கரையில் மலர்கள் பூத்துக்குலுங்கிய மருதமரங்கள் நிறைந்த வனத்தின் மையத்தில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி ''நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ'' என மனமுருகி வேண்டி பாடினார். அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடச்செவியில் கைவைத்து ஒரு புறம் சாய்வாக திரும்பி ரசித்துக் கேட்டார். பின்பு தன்னை நினைத்து ஆற்றைக்கடக்கும் படி கருவூர் சித்தரிடம் சிவன் கூறவே, அதன் படி ஆற்றைக் கடந்த கரூவூரார் அவரை வணங்கி அருள் பெற்றார். இவ்வாறு கருவூர் சித்தரின் பாடலை செவிசாய்த்து கேட்டதால் இங்கு சிவலிங்கம் இடப்புறம் சாய்வாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.


இத்தலத்தில் அருள்புரியும் சிவபெருமான், தலையில் வெட்டுப்பட்ட கோடரியின் தடம், மார்பில், மானின் மீது பாய்ந்த அம்பு பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். காயம்பட்ட சுயம்புமூர்த்தி என்பதால் அவரது காயத்தை ஆற்றிடும் பொருட்டு சந்தனாதி தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது. சுவாமிக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கோமதியம்மாள், கோமாள் மலையின் கோமதி நதியில் இருக்கறி£ள் என அசரீரி கேட்கப்பெற்று அதன்படி அந்நதியில் இருந்து எடுக்கப்பட்டு பிரதிஷடை செய்யப்பட்டவளாக ருத்ராட்சை மேனியை உடையவளாக பொலிவுற அருட்காட்சி தருகிறாள். இத்தலம் இந்திரன் இந்திராணியுடன் இங்கு வந்து தாமிரபரணி ஆற்றின் கரையில் சுரேந்திரமோட்ச தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து சிவனை வணங்கி தோஷசம் நீங்கப்பெற்றதாகவும் கூறப்படும்.

இத்தலத்தின் மரம் மருதமரம். இத்திருத்தலத்திற்கு இன்னொரு தல வரலாறு கூறப்படுகிறது. நீதி நெறி சிறக்க வாழ்ந்த தர்ம சக்கரவர்த்தியான ஆதிமனு, பூவுலிலுள்ள சிவத் தலங்களை தரிசிக்க ஆவலுற்றார். அதற்கு வழிகாட்ட குறுமுனியான அகத்தியரை தரிசிக்க பொதிகை மலை சென்றார். மன்னனுக்கு தாமிரபரணி மகாத்மியத்தை கூறி உள்ளம் குளிரச் செய்தார் அகத்தியர். அதைக் கேட்ட ஆதிமனு, அந்த நதிக் கரையிலுள்ள சிவத் தலைங்களை கண்ணாரக் கண்டு கொண்டே வந்தார். திருப்புடைமருதூரை அடைந்தார். தேவேந்திரம் தன் பாவம் நீங்க, அங்கே மருத மரமாக தவம் செய்யும் கோலம் பார்த்து மகிழ்ந்தார். தேவேந்திரன் தன் பாவம் நீங்க, அங்கே மருத மரமாக மாறி தவம் செய்யும் கோலம் பார்த்து மகிழ்ந்தார். தேவேந்திரன் தவத்திற்கு இணங்கி சிவபெருமான், மருதமரத்தினடியில் லிங்க வடிவினனாகத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமுற்றார். சரஸவதி, லட்சுமி, பூமாதேவி ஆகிய முப்பெரும் தேவியரும் ஈசனை ஆராதிக்கும் அழகைக் கண்டார். தமக்கும் இந்தப் பாக்கியம் கிடைக்குமோ என்று ஏங்கிய ஆதிமனு, மருதமரத்திற்கு அருகில் ஓடினார். ஆனால், தேவியர்கள் மருத மரத்தினுள் மறைந்தனர். அவர் உள்ளம் மருகியது. ஈசனை காண வந்த எனக்கு இதென்ன சோதனை! தன்னுயிர் நீத்தாவது அந்த பாக்கியம் அடையத் துணிந்த அவர் இடுப்பிலிருந்து வாளை உருவி தன் சிரத்தை கொய்துகொள்ளப் போனார். ஏதோ ஒரு சக்தி சிரத்தை நோக்கி நகர்ந்து வாளை திசை திருப்ப, திசை மாறிய வாள் மருத மரத்திற்குள் இறங்கியது. மரத்திலிருந்து சட்டென்று குருதி ஊற்றாக பெருகியது. ஆதிமனு அதிர்ச்சியடைந்தார். மேலும் பாவம் செய்கிறோமே என வருந்தி மறுபடியும் தலையை வெட்ட முயன்றார். அப்போது 'நிறுத்து' என கம்பீரக் குரல் கேட்டது. குரல் வந்த திசையைப் உற்றுப்பார்க்க, மாபெரும் விருட்சத்தின் மத்தியில் சகல தேவியர்களுடன் மருதூரான் திருக்காட்சி அளித்தார். கண்டவர் பிரமித்தார். மருதகாட்டிற்கும் தாமிரபரணிக்கும் அருகே அருங்கோயில் எழுப்ப அனுமதி கோர, சிவனும் சுயம்புவாக நான் பொங்கிய இடத்தில் கோயில் அமைத்து தொழுது நில் எனறார்.


ஆ யிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலை வீரபாண்டியனில் தொடங்கி ராஜராஜன், மார்த்தாண்டவர்மன், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் மற்றவர்களும் கட்டமைப்பில் பங்கெடுத்துள்ளனர். இக்கோவிலின் சிவன் சிலை, கோமதியம்மாள் சிலை சிறப்பு வாய்ந்தது. சிவன் சாய்ந்த நிலையில் இருப்பது காண்போரை கவர்ந்திழுக்கும். 63 நாயன்மார்களுக்கும் சிலை உள்ளது. மர வேலைப்பாடு, கல் வேலைப்பாடு மற்றும் சுவர் ஓவியங்கள் பழமையானது. 400 ஆண்டுகள் பழமையான வண்ண சுவர் ஓவியங்கள் அன்றைய மக்களின் பண்பாடு, தொழில், வாழ்க்கை முறை போர் போன்றவற்றை சித்தரிக்கின்றன. இந்த ஓவியங்கள் பண்டைய தொழில்நுட்பமான கடுக்காய், காய்கறிகள் முட்டை போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். நாம் நம்ப முடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த மர வேலைப்பாடுகளும், 12ம் நூற்றாண்டு கல் வேலைப்பாடுகளும் பிரமிக்க வைக்கும். கோவிலைச் சுற்றி பத்து மண்டபங்கள் (மடங்கள்) உள்ளன. இவை அனைத்தும் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவையாகும்.


திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதியுடன் கடனா நதி சங்கமிக்கிறது. இங்கு பத்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிமனுவிற்கு மரப்புடையில் இறைவன் காட்சியளித்த இடம் உள்ளது. அந்த இடத்தில் உடைந்து மருதமரப்புடை உள்ளது. அதை கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. கோயிலின் முன்புறம் முழுமையடையாத ஏழு அடுக்கு பிரமாண்டமான கோபுரம். உள்ளே நுழைந்தவுடன் ஐந்தடுக்கு கொண்ட அடுத்த கோபுரம். அந்த கோபுரத்தின் உள்ளே கோயில் தல புராணங்கள் மற்றும் பல்வேறு கருத்துகளைச் சொல்லும் வண்ண ஓவியங்களும், மரச்சிற்பங்களும் காணப்பாடுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவிலுக்கு அருகில் ஆண்கள் பெண்களுக்கென இரண்டு படித்துறைகள் உள்ளன. அருகே உடைமாற்றும் அறைகளும் உள்ளது.


இந்தக் கோயிலின் சிறப்பம்சம் மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி இறைவனது சந்நதியில் காத்துக்கிடப்பர். தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் படி பாயசம் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறார்கள். அதன்படி நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகின்றனர். சுவாமியின் அருகிலேயே அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்ற பக்தர்கள் கருப்பு வளையலை காணிக்கையாக கொடுத்து பயன்பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டு வருபவர்கள் அநேகம். எல்லாவற்றிற்கும் மேலாக மரணம் பயம் தீர்க்கும் தலமாகவும் திருப்புடைமருதூர் திகழ்கிறது. மீண்டும் மீண்டம் பிறக்கும் சிறை உடலை நீக்கி பேரின்ப பெருவீடு அருள்கிறார் புடார்சுனர் எனும் புடைமருதீசர்.

இத்திருத்தலத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்திருக்கும். நகரங்களில் வசிப்போர் அவசியம் வந்து செல்லவேண்டும். இயற்கை கொஞ்சும் இத்திருத்தலம் கிராமத்தில் அமைந்திருப்பது இன்னொரு முக்கியமான அம்சம் ஆகும். கிராமங்களில் உள்ள வாழ்க்கை முறை அவர்களது பண்பாடு போன்றவைகளை நீங்கள் அருகில் இருந்து பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பு. பறவைகள், வீட்டு விலங்குகள், விவசாயம் இவைகளை கண்கொண்டு கண்டு திளைத்திருக்கலாம். இத்திருத்தலத்திற்கு வந்து செல்வதால் கிராமம் ஒரு படி வளரும்.



நாறும்பூநாதனார் கோவிலுக்கு அருகில் ஊராட்சியின் சுற்றுலா தங்குமிடம் உள்ளது. நன்கு வசதியான ஐந்து அறைகள் உள்ளன. இவைகளில் ஒரே நேரத்தில் இருபது நபர்கள் தங்கலாம். அருகில் உள்ள அம்பாசமுத்திரத்தில்(12 கிலோ மீட்டர்) தங்கும் வசதி உள்ளது. பாபநாசம் செல்லும் சாலையில் உள்ள வீரவநல்லூரில் இருந்து போதிய பேருந்து வசதிகள் உள்ளன. வீரவநல்லூரில் இருந்து தரமான கிராமச் சாலை உள்ளது. வாகனங்களில் வருவோர் தைரியாக வந்து செல்லலாம்.


தாமிரபரணியில் நீராடி, நாறும்பூநாதனை தரிசித்து, கோமதி அம்பாளை வழிபாட்டு, கிராமத்து மண் மனத்தை உள்வாங்கிட கோடையில் வாருங்கள். பறவைகளைப் பார்த்து, பாசமுள்ள கிராமத்து மனிதர்களிடம் உறவாடி, இயற்கையான காற்றினை நுகர்ந்திட இன்றே திட்டமிடுங்கள் திருப்புடைமருதூர் சென்றிட. கிராமத்து பொருளாதாரம் சுற்றுலா வகையிலும் உயர்ந்திடும். நமக்கு நல்ல அனுபவம் கிடைத்திடும்.