Sunday, June 12, 2011

சகாயம் காட்டாத சகாயம்




மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருக்கும் மக்கள் நேசிக்கும் மனிதர் யார்... சகாயம்... புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்த நெஞ்சுரம் மிக்க தமிழர். வறுமையில் பிறந்து, வள்ளுவனை படித்து, பெற்றோர்களின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சகாயம் தேர்தல் ஆணையத்தால் மதுரைக்கு மாறுதல் ஆனவர்.  மதுரையில் தேர்தலை சிறப்பாக நடத்த தகுதியானவர் என்பதை தேர்தல் ஆணையம் சரியாக தேர்வு செய்துள்ளது.  ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக் கணக்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று சொல்லும் சகாயம்... தனது வங்கி இருப்பை வெளிப்படையாக தெரிவிப்பவர்.

லஞ்சம் வாங்கி அனைத்தையும் வாங்கும் பல அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் தனது குழந்தையின் மருத்துவ செலவிற்கு கூட பணம் தேடும் நிலையில் இருந்தவர் தான் இந்த ஆட்சியர்.  ஆம் கோயம்புத்தூரில் வருவாய்த்துறை அதிகாரியாக மாற்றலாகியிருந்த நேரம் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு தீடிரென ஒரு நாள் மூச்சு விடுவதில் சிக்கல்.  மருத்துவமனைக்கு எடுத்து ஓடினார்.  ஊசி போட்டு மாத்திரை கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்தவருக்கு... குழந்தையைப் பரிசோதித்த டாக்டர் உடனே குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும் என்றார்.  மாதக் கடைசி, பாக்கெட்டில் ஆயிரத்திற்கும் குறைவு. புதிய இடம், அறிமுகம் என்று சொல்லிக்கொள்ள ஆள் இல்லை.  தனக்கு கீழ் பணிபுரிவோரிடம் கடன் கேட்க தயக்கம்.  வானத்தைப் பார்த்து யோசிக்கையில் தனக்கு காஞ்சிபுரத்தில் நண்பராக இருந்த பள்ளி ஆசிரியர் கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தது ஞாபம் வர அவரை தொடர்பு கொண்டு நாலாயிரம் கொண்டுவரச் சொன்னார்.  அவர் கொண்டுவந்ததும் சிகிச்சை செய்யப்பட்டது.  அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்தார்.  இவர் நினைத்திருந்தால், ஒரே மணி நேரத்தில் பல இலட்சங்களை வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்ய வில்லை.  லஞ்சம் கொடுக்க மதுபானக் கடை உரிமையாளர்கள் தயாராக இருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சம் தான் மிகப் பெரிய தடை. நான் எந்த வொரு சூழலிலும் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதியோடு இருக்கிறார். இந்த கிராமத்தானுக்கு வைராக்கியம் அதிகம் தான்.

காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியாராகப் பணியாற்றிய காலத்தில் ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததை புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு, மாதிரியை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்து, சோதனை முடிவு குடிக்க தகுதியற்றது என்று வரவே, அறிக்கை தயாரித்து அந்த உலகாளவிய நிறுவனத்திற்கு சீல் வைத்தவர்.  அறிக்கையின் நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்து பூட்டி சீல் வைக்கப் போகிறோம் என்று சொன்ன போது உடனிருந்த அரசு அதிகாரிகள் கூட ஆடிப்போனார்களாம். பல்வேறு இடங்களிலிருந்து வந்த பிரசர்களை சுலபாக எதிர் கொண்டிருக்கிறார்.  உண்மை வெல்லும் என்பது உண்மையே.

எனக்கு கிடைத்த வாய்ப்பை ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவேன் எனக் கூறும் சகாயம் நேரிடையாக கிராமங்களுக்கே செல்கிறார்.  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களையெல்லாம் கிராமங்களிலே நடத்துகிறார். எங்க ஊருக்கு நேத்து கலெக்டர் வந்து போனார் என மக்கள் சொல்வது எவ்வளவு பெரிய மாற்றம். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக வருவதற்கு முன் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். 

நாமக்கல் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக்க ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீட்டி இதுவரை ஏழு லட்சம் மரக்கன்றுகள் மக்களின் ஒத்துழைப்போடு நடவு செய்துள்ளார். இதனைப் பராமரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். மரத்த வச்சவன் மரமாக்கி பார்ப்பான். நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என எல்லா இடங்களுக்கும் திடிர் விசிட்.  சிறப்பாக இருக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டு. மேம்படுத்த வேண்டிய இடங்களில் குட்டு வைக்கவும் தவறுவதில்லை. 

இந்தியாவிலேயே தன் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிட்ட முதல் ஆட்சிப் பணி அதிகாரியான இவருக்கு மதுரையில் ஒன்பது இலட்ச ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் லோன் போட்டு கட்டப்பட்ட வீடு ஒன்றுதான் சொந்தமானது. 15 இடங்களுக்கு பணிமாற்றல் செய்தாலும் செய்யப் போகிற பணி ஒன்றுதான்.  அது நேர்மை வழியில் நெஞ்சை நிமிர்த்து மக்களுக்காக பணியாற்றுவதுதான்.

நம்ம சம்பாத்தியத்துலதான் நமக்காகச் செலவு செய்யணும் நீர நேர்மையான அதிகாரியா செயல்பாடனும் போன்ற அம்மா அப்பாவின் வார்த்தைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து வரும் இவரை வாய்க்கு வந்தபடி வசைபாடுதல் தகுமோ. நல்ல நோக்கத்தோடு (உலகின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், என்ற பெருமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் தான். சுதந்திரமாக தேர்தலை நடத்த, எங்களைப் போன்ற அலுவலர்களை தேர்தல் கமிஷன் பணித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தலை சிலர் மட்டுமே சேர்ந்து நடத்த முடியாது. அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு அடையாளம் உண்டு. அதே போல நமது தேசத்திற்கு உள்ள அடையாளம் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை. அத்தகைய ஜனநாயகம் போற்றப்பட வேண்டுமென்றால் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால்தான் அது உண்மையான ஜனநாயகமாகும். இப்பணியை மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, போலீஸ் துறையால் மட்டுமே செய்து விட முடியாது. அனைவருடைய பங்களிப்பும் இதில் இடம்பெற வேண்டும். 2 நாட்களில் 200க்கும் மேற்பட்ட வந்த புகாரின் அடிப்படையில் பல இடங்களுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டேன். உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் கடமை உள்ளது. நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியான அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டும். மற்றவர்களையும் ஓட்டளிக்க சொல்லுங்கள். நேர்மையான ஓட்டுப்பதிவு முக்கியம். அன்பளிப்பு பெற்றாலும் அது லஞ்சம் தான். அதைப் பெறாமல் ஓட்டளியுங்கள். லஞ்சம் பெற்று அளிக்கும் வாக்கு; தேச நலனுக்கு தூக்கு.எந்த மாற்றத்தையும் இளைஞர்கள் தான் உருவாக்க முடியும். "லஞ்சம் இல்லாத ஓட்டளிப்போம்' என மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புங்கள் என்றார்) பேசிய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டு செய்தியை திரிப்பது தர்மம் ஆகாது.  நல்ல மாற்றம் வேண்டுமென்று பள்ளி கல்லூரி மாணவர்களிடம் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை வைத்துள்ளவர் வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என்று மாணவர்களிடம் அவர் பேசியதில் வியப்பேதுமில்லை.


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்.  யார் வாக்களர்களுக்கு பணம் கொடுத்தாலும் சகாயம் காட்டமாட்டார்.  தன் மீது எந்த ஒரு கட்சி சாயமும் பூசி விட வேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறார். இவரை ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார், சகாயம் போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் தங்களது பொறுப்பின் மதிப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.  நேர்மையின் சின்னமாக விளங்கும் இவரைப்போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும்.  அப்போதுதான் தங்களது ஆட்சி அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் கொட்டம் அடங்கும்.







No comments: