Monday, September 10, 2012

மனித மலம்


ஒரு துளிக்கே
மரனமென்றால்
எனக்கு மட்டும் ஏன்
இத்தனை கோப்பை விஷம்
-          இளவேனில்

சமீபத்தில் ஒரு ஆய்விற்காக மதுரைக்கு அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்திற்கு சென்றிருந்தோம்.  இருபதுக்கு மேற்பட்டோரை கொண்டிருந்த அணி பல்வேறு விதமான தகவல்களை திரட்டியது.  விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருந்த கிராமத்தில், அடுத்த தலைமுறை விவசாயத்தில் ஈடுபடுமா என்பது வினாக்குறி? 144 வீடுகள், ஏழு வீடுகளில் யாரும் குடியிருக்க வில்லை.  இரண்டு வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு இல்லை.  (இப்போது மின் இணைப்பு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?) அனைத்து வீடுகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது.  அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது.  சில வீடுகளில் இரண்டு மூன்று அலைபேசி இருப்பது வேறு விசயம். கலந்தாய்வில் கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்தது. 

ஊரை ஒட்டி இருந்த இரண்டு சாலையின் இரு புறமும் மனித மலம் வட்டமாக, வடிவமில்லாமல், இடைவிடாது இருந்தது.  ஆள் நடமாட்டம் உள்ள இந்தச் சாலைகளில் எப்போது இப்படி இருந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.  மறைமுகமாக விசாரித்த போது ஒரு சாலை ஆண்களுக்கும், இன்னொரு சாலை பெண்களுக்குமான திறந்த வெளி கழிப்பறையாம்.  இக்கிராமத்தில் பாதிக்கு மேற்பட்டோர் நிலவுடமையாளர்கள் (கால் ஏக்கரிலிருந்து பத்து ஏக்கர் வரை),  அனைவரும் சொந்த வீடு உடையவர்கள்.  ஊரும் அவர்களது சொந்த ஊர்.  பிறகு ஏன் ஊரைச் சுற்றி மலம் கழிக்கிறார்கள். 

ஊரில் இருபத்தி நான்கு வீடுகளில் கழிப்பறை உள்ளது.  இதில் சில வீடுகளில் அரசு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டதால், கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது.  இது இந்திய புள்ளி விபரத்தை விட குறைவு.  இருபத்தி நான்கு வீடுகளில் எத்தனை வீடுகளில் கழிப்பறை உபயோகத்தில் உள்ளது என்பதை ஆராய்ந்த போது இரண்டே வீடுகளில் மட்டுமே! மீதமுள்ள இருபத்தி இரண்டு வீடுகளில் உள்ள கழிப்பறை? ம்ம்... இருக்கு ஆனா, இல்லை... ஆனால், எல்லோரும் இருப்பது (மலம் கழிப்பது) திறந்த வெளியில்....
அலைபேசியை எல்லோரும் மிகச் சாதரனமாக இயக்குகிறார்கள்.  பாட்டி எந்த வித பதட்டமுமின்றி பேரனிடம் பேசுகிறது.  ஹலோ என்ற ஆங்கில வார்த்தை அவ்வளவு எளிதாக அனைவரிடமும் புழங்குகிறது.  அபத்தமான உரையாடல்தான் அதிகமாக இந்த அலைபேசிகளில் அரங்கேறுகிறது.  நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்து நலத்தை பாதிக்கும் அலைபேசி ஈசியாகிவிட்டது.  களையெடுக்க போகும் போது கூட கையில் வைத்திருப்பதாக பெருமிதம் கொள்கின்றனர்.  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் தொடர் நாடகங்களை மெய்மறந்து பார்க்கின்றனர்.  விளம்பரம் வந்ததும் ரிமோட் எடுத்து மாற்றி அடுத்த தொடரை பார்க்கின்றனர்... என்னே வளர்ச்சி! இது புதுப்பட்டியில் மட்டுமில்லை... தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தான்.  மின் சாதனப் பொருட்கள் வீடுகளை அலங்கரிக்கின்றன.  நுகர்வு கலாச்சாரம் பெருகிறவருகிறது.   அதே நேரம் பாதுகாப்பு?

உண்டவன் உரம்போடுவான் என்ற பழமொழி நமக்குச் சொல்கிற சேதி, மலம் உரமாகும் என்பது.  மலம் எப்போது உரமாகும்? மக்கிய பின்பு.  மக்குவதற்கு முன்பு மலம் மரனத்தின் வாயிலாகும். மனித மலம் எண்ணற்ற பாக்டிரியா, வைரஸ், கொக்கிப் புழுக்களின் கூடாரம்.  நீரினால் பரவக்கூடிய பல்வேறு வியாதிகளுக்கு மனித மலமே மூலம்.  அதனால் தான் என்னவோ  பூனை தனது மலத்தை மூடி வைக்கும்.  பாருங்கள் பூனை எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது.  நாம் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.  அலைபேசி வசதியை எளிதாக ஏற்றுக் கொண்ட நம்மால் ஏன் கழிப்பறை வசதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற, மரணத்தை தருகிற மதுவை ஏராளமாக பணம் கொடுத்து தாரளமாக குடிக்கிறவர்களால் , நான்கு ரூபாய் ஐந்து ரூபாய் கொடுத்து பஞ்சு வைத்த உயிர்க் கொல்லி சிகெரெட் இழுக்கிறவர்களால், தினசரி அலைபேசிக்கு தீனி போடுகிறவர்களால்,  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்  கொடுத்து கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர், மலம் கழிக்காமல், பலரும் பார்க்க பேருந்து நிறுத்தத்தின் ஏதாவது ஒரு ஓரேத்தில் சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது அசிங்கமாகத் தெரியவில்லை.  விலையில்லாமல் அரிசியில் தொடங்கி மடிக் கணிணி வரை தருகிற அரசாங்கம் கூட பேருந்து நிறுத்தங்களில் (நவீன) கழிப்பறை வசதியை செய்து தரமுடியாததை எண்ணி அவர்களும் அசிங்கப்பட்டதாகத் தெரியவில்லை.  உயிர் விலை மதிக்க முடியாத ஒன்று.  இவ்வளவு எளிதாக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது.  அரசு மருத்துவ மனைகளில் உள்ள கழிப்பறையைப் பார்த்தால் புரியும்! நமது சுகாதாரம் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்று.

பொதுவாக கிராமப் புறங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது.  கிராமப் பின்னணியில் உருவான திரைப்படங்களில் கூட மலம் கழிப்பதை திறந்த வெளியிலேயே படம் பிடித்திருப்பார்கள்.  மேலை நாடுகளில் மலம் கழிக்க தனியாக போவார்கள். உணவு உண்பதற்கு அனைவரும் கூடி உண்பார்கள்.  ஆனால், நமது கிராமங்களில் மலம் கழிக்க போவது என்றால் கூட்டம் கூட்டமாக போவது.  அங்கே ஒரு மாநடே நடத்துவது.  இதை வெண்ணிலா கபடி குழு படத்தில் அந்த இளைஞர்கள் கல் மறைவில் இருந்து பேசிக்கொண்டிருப்தை காண்பித்திருந்தார்கள்.  இன்னும் கிராமங்களில் கழிப்பறையில் மலம் கழிப்பதை அவசியமின்மையாகவே கருதுகிறார்கள். அலைபேசி அவசியமானது என்பதை வலியுறுத்திய நுகர்வு சமுதாயம் கழிப்பறை அவசியம் என்பதை ஏன் வலியுறுத்த வில்லை.

கம்மாயில போயி ஆயி போறதுதான் சுகம் என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  ஆயிலிருந்து வருகிற கொக்கிப் புழு நம் கால் பாதத்தின் வழியாக உள் சென்று சுக வீணமாக்கும் என்ற செய்தியை உணர வைக்க வேண்டுமல்லவா? வெளியில் செல்லும்போதும், கழிப்பறை செல்லும் போதும் அவசியம் செருப்பு போடுங்கள் என்று சொன்னால், என்ன பாகுமானம் பாரு என்கிறாள் பாட்டி.  எது பகுமானம், எது பாதுகாப்பு என்பதை உணர வைக்க முடியாதா நமது அரசாங்கமும், ஊடகமும், சமுதாயமும் பாவப்பட்டதல்லவா!

நீரில் ஒரு துளி மலம் கலந்தாலும், பலவீணமானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.  காலரா, வாந்தி போன்றவை துரித்த்தில் ஒட்டிக்கொண்டு, மருத்துவச் செலவை ஏற்படுத்தி முன்னேற்றத்தை பாதிக்கும்.  தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு எல்லாம் வேலையில்லாம் செய்ய கழிப்பறை பயன்பாடுடன் தன்சுத்தம் அவசியம்.   ஒரு வீட்டிற்கு கழிப்பறை தேவையில்லை என்ற எண்ணம் நம் மக்களிடம் அதிகமாக இருக்கிறது.  நவீன உலகின் போக்கிற்கு ஏற்ப பல்வேறு விசயங்களில் தங்களை மாற்றிக் கொண்டவர்களால், இந்த விசயத்தில் மாற்றிக் கொள்ள இவ்வளவு தயக்கம் ஏன்?

வேறு வழியின்றி பொது கழிப்பறையை பயன்படுத்துவோர், மிக அருவருப்பாக  வைத்திருக்கின்றனர்.  தொலைக்காட்சியை இயக்கத் தெரிகிறது.  அலைபேசியில் அத்தனையும் தெரிகிறது.  ஆனால் கழிப்பறையில் மட்டும் உட்கார்ந்து ஆய் போகத் தெரியாது என்றால்?  காரியக்காரன் கடைக்குப் போய் சூத்த கத்தரிக்கா வாங்கின கதையாகத்தான் இருக்கிறது. பொதுக்கழிப்பறை ஏலத்திற்கு எடுத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் குறியாய் இருக்கிறார்களே ஒழிய, சுத்தமாக வைத்திருப்பதில்.. சே...

காந்தி கழிப்பறை சுத்தம் செய்த பணியை எல்லோரும் நினைவு கூறுகிறார்கள்.  காந்தியின் சீடர் வினோபாவிற்கு முதலில் வழங்கப்பட்ட பணி கழிப்பறையை சுத்தம் செய்வது.  இப்படி மேடைகளிலும் வகுப்பிலும் பேசிக்கொண்டு... தெருவில் கழிப்பது... வேதனை. இனி மேல் காந்தி எந்த வொரு சூழலிலும் திறந்த வெளியில் மலம் கழித்தில்லை என்று பாடம் கற்பியுங்கள்.  ஏதாவது நிகழ்கிறதா என்று பார்ப்பபோம்.  வீட்டில் சமையல் அறை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கழிப்பறை.  சமையல் அறையில் பேணுகிற சுத்தம், கழிப்பறையில் இருக்க வேண்டும்.  இவை இரண்டும் சரியாக இருக்கும் போது நாம் கடவுளிடம் வேண்டுகிற கை கால் சுகத்த கொடு சாத்தியப்படும்.  வீட்டிற்கு ஒரு கழிப்பறை, வீதிக்கு ஒரு பொதுக் கழிப்பறை வேண்டும்.


கழிப்பறை திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு ஏன் இன்னும் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்று தெரியவில்லை.  அரசு மானியத்துடன் வழங்கிய திட்டங்கள் ஏன் முழுமையாக சென்று சேரவில்லை என்பதை பார்க்கத் தவறியது ஏன்? உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, கல்வி புகட்டி ஏன் இத்திட்டத்தை எடுத்துச் செல்லவில்லை? இப்படி ஏன் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருப்போம்.  மக்கள் மத்தியில் மாற்றம் வராமைக்கு யார் காரணம்.  மக்கள் ஏன் மாற்றத்தை விரும்பவில்லை.  மக்கள் மாறதவர்களா? எந்த நம்பிக்கை அவர்களை கட்டிப்போட்டுள்ளது.  அதை உடைத்தெறிய எழுத்தாணி எடுப்போம்.

No comments: