மனித வாழ்க்கை நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. இன்று உறங்கி நாளை எழுவோம் என்ற நம்பிக்கைதான் நாளை குறித்தும் அடுத்தடுத்த நாட்கள், சந்ததி குறித்தும் நமது எதிர்பார்ப்பை வலுவாக்குகிறது. நம்பிக்கையினால் இயங்கும் வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைய நம்பிக்கைகள் உள்ளமெங்கம் விரவிக்கிடக்கின்றன. இந்த நம்பிக்கைகளை நாம் நமக்கு தகுந்தாற்போல் பலவாறு கூறுகிறோம். அவை நம்பிக்கை, அதீத நம்பிக்கை, அவநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, மூட நம்பிக்கை இப்படி... இது அவருடைய அதீத நம்பிக்கை என்று நாம் சொல்வோம். ஆனால், அவருக்கு அது சரியான நம்பிக்கையாக இருக்கும். ஒருவர் நம்பிக்கை என்று கருதிச் செய்யும் செயல் பிறருக்கு மூட நம்பிக்கையாகத் தெரியும். இந்த நம்பிக்கைகள் தனிநபரைப் பொறுத்தும், சார்ந்த சமூக சூழலைப் பொறுத்தும் அங்கங்கே வேறுபடுகிறது.
தொன்று தொட்டு சில நம்பிக்கைகளை கடைப்பிடித்து வருகிறோம். அவற்றின் ஆழம் தெரிந்து பரிசீலிப்பது சரியாக இருக்கும். உதாரணத்திற்கு சங்கிலி, வீட்டுக் கதவினை குழந்தைகள் வீணாக ஆட்டிக் கொண்டிருந்தால், பெரியவர்கள் வீட்டுக்கு ஆகாது என்பார்கள். இதனை ஆராய்ந்து பார்க்கும் போது கதவு எழுப்புகின்ற ஒலி, சங்கிலி எழுப்புகின்ற ஒலி நமது காதை பதம் பார்க்கும். இது போன்ற ஒலி மாசுபாட்டினை தடுப்பதற்காக முன்னோர்கள் சொன்னதாக இருக்கலாம். சாப்பிடும் போது இழையின் நுனிப்பகுதி இடது கைப் பக்கம் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இடது பக்கமாக இழை இருக்கும் போது இழையின் நடு நரம்புப் பகுதியின் கீழ் பகுதி சற்று கடினமாகவும், மேல் பகுதி சற்றே மெல்லியதாகவும் இருக்கும். மேல்பகுதியில் காய், கூட்டு போன்றவை வைத்துக்கொள்ளவும், கீழ் பகுதியில் உணவு வைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கவே இதனைச் செய்கின்றனர். அவ்வாறு செய்கிற போது சற்றே கடினமான கீழ்பகுதி கிழிந்து விடாமல் இருக்கும். அவ்வளவு தான் இதன் சூட்சமம்.
நமது நம்பிக்கைகளில் சில இப்படி இருக்க, சில சூழலைப் பாதிப்பவையாகவும் இருக்கின்றன. பொதுவாக பூசனிக்காயை சாம்பருக்கு பயன்படுத்துவார்கள். இந்த சாம்பார் பூசனிக்காய் சாம்பாரில் இருக்கும் போது நாம் உண்டு உயிர் காக்கிறது. இதே பூசனிக்காய் திருஷ்டி பூசனிக்காயக மாறும் போது விளைவு உயிரைக் கூட பறிக்கிறது. திருஷ்டி பூசனிக்காயை முச்சந்தியில் உடைக்க வேண்டும் என்று நம்மவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பலர் பயன்படுத்துகிற பாதையில் இது போன்று உடைப்பதால் விபத்து ஏற்படுகிறது. இந்த பூசனிக்காய் மேல் ஏறுகிற இரண்டு சக்கர வாகனங்கள் பரிதாபத்திற்கும் விபத்திற்கும் உள்ளாகின்றன. உங்களது திருஷடியை கழிக்க மற்றவரை நோக வைக்கின்ற செயல் எந்தவிதத்தில் நல்ல நம்பிக்கையாக அமையும்.
காலம் காலமாக கோழி குஞ்சுபொறிப்பதற்கு ஒரு தட்டில் மணல் வைத்து அதன் முட்டைகளை வைத்து அடைகாக்க வைக்கின்றனர். குஞ்சு பொறிக்கின்ற போது முட்டையின் ஓடுகள் உடைந்து மணல் மீது கிடக்கும். கோழி அடையிலிருந்து வெளிவந்தபின் அந்த மணலையும் உடைந்து கிடந்த முட்டை ஓடுகளையும் பலர் நடந்து செல்கிற பாதையில்தான் போடுகின்றனர். இதில் நம்மவர்களின் நம்பிக்கை மணலும் உடைந்த ஓடும் எந்தளவிற்கு மிதிபடுகிறதோ அந்த அளவிற்கு கோழிக் குஞ்சுகள் பல்கிப் பெருகும் என நம்புகின்றனர். குஞ்சுகள் பல்கிப் பெருகுவதற்கு கோழியும், அதன் உரிமையாளரும் அக்கறையோடு கவனித்தால் தான் பல்கிப் பெருகும். அதை விடுத்து மக்கள் நடக்கின்ற பாதையில் போடுகின்ற செயல் பயனைத்தராது. அது பண்பான செயலும் அல்ல. இதில் இன்னொன்றும் கோழி அடைகாத்து குஞ்சாக்காதா முட்டைகளை கூமுட்டைகள் என்பர். இந்த கூமுட்டைகளை உண்ணுகிற பழக்கம் சில இடங்களில் இருக்கிறது. ஆனால், இதனை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தருவர். ஏன் என்றால், ஆண்கள் சபை ஏறி பேசுபவர்களாம், அவர்கள் இந்த முட்டைய தின்றால் சபையில் நின்று பேசக்கூடிய அறிவு வளராது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர். (பெண்ணடிமைக்கு இந்த நம்பிக்கைகள் தண்ணீர் ஊற்றுகின்றன) நாள்பட்ட முட்டையை யார் தின்றாலும் நல்லதல்ல என்பதை உணர்த்தித்தானே ஆகவேண்டும்.
நகரங்களில் கடைவைத்து வியாபாரம் செய்பவர்கள் இரவு கடையை அடைத்த பின் கடைக்கு வெளியே சூடம் ஏற்றுகின்றேன் என்ற பெயரில் ஒரு ஒலைப்பெட்டியில் எதையெதையோ போட்டு தீ வைக்கின்றனர். அட எந்த நம்பிக்கையோ இது பூமிப்பந்துக்கு நல்லதல்ல. நகரங்கள் பல்வேறு வகையில் மாசுபட்டு வருகிற சூழலில் இப்படி வேறு செய்வது வியாபாரிகளுக்கு அழகல்ல. சில கடைகள் இன்னும் ஒரு படி மேலே போய் எண்ணெய் சார்ந்த டப்பாக்களில் தீ வைப்பதும், டயரில் தீ வைப்பதும் மன்னிக்க முடியாதவை. இன்று திருஷ்டி போக சூடம் கொளுத்துவது என்பது தவிர்க்க முடியாது ஒன்றாகிவிட்டது. பூமிக்கு காய்ச்சல் வந்து, பாடாய்ப் படுகிற சூழலில்.... பூமியின் காய்ச்சலை தணிக்க நாம் முற்படுவதை விடுத்து மீண்டும் மீண்டும் பாழ்படுத்துவது வாழுகின்ற நமக்கு சரியாகது.
கோவில்களில் தேங்காய் உடைப்பதற்கு தனியாக இடம் கொடுத்திருந்தாலும் கோவில் வீதிகளிலும், படிகளிலும் தேங்காய் உடைக்கவே விரும்புகிறோம். தேங்காயின் சிரட்டை யார் காலிலாவது குத்தினால்... நாம் யோசிப்பதே இல்லை. கோவில் வீதிகளிலும் படிகளிலும் காலணி அணிந்து செல்வதில்லை. இன்று பாதிக்கு மேல் இனிப்பு மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். தேங்காய் சிரட்டைகளை கவனிக்காமல் அவர்கள் மிதித்துவிட்டால், அதைவிட பெரிய தண்டனை அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
நகத்தை கடித்தால் தரித்திரம் வரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. இது நாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. நக இடுக்களில் உள்ள அசுத்தம் உடலுக்குச் சென்றால் நோய் வரும். நோய் வந்தால் தரித்திரம் தானே... இதே போல் இரவு வேளைகளில் நகத்தை வெட்டக் கூடாது என்பார்கள். வெட்டிய நகம் ஆங்காங்கே விழுந்துவிடும் என்பதற்காக....
சூழலுக்கு பாதிப்பை விளைவிக்கின்ற நம்பிக்கைகளை சட்டம் போட்டு மட்டும் தடுத்துவிட முடியாது. நாம் ஆழமாக சிந்தித்து, நமது மனங்களில் ஏற்படும் மாற்றமே நல்ல விளைவைத் தரும். யோசிப்போம்...
பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல் செப்டம்பர் 2011 இதழில் வெளிவந்த கட்டுரை
No comments:
Post a Comment