Tuesday, December 28, 2010

சகியே.. இனியும் சகிக்கவோ...

பேச வேண்டியதை நானும் பேசுகிறேன்...
சகியே.. இனியும் சகிக்கவோ...
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பத்துப்பட்டிக்கு வத்தலக்குண்டிலிருந்தும், உசிலம்பட்டியிலிருநதும் தினசரி நான்கைந்து முறை பேருந்துகள் வந்து செல்கின்றன.  இப்பேருந்துகள் நிற்பது அந்த ஊர் கோவிலுக்கு முன்பு உள்ள பகுதியில்... ஊருக்குள் வருகின்ற பேருந்துகள் இங்கு குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நிற்கும். ஆனால். இங்கு இரண்டு பேருந்து நிறுத்தம். முதல் பேருந்து நிறுத்தத்திற்கும் இரண்டாவது பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் ஒரு பள்ளிக்கூடம் மற்றும் பொதுக் கழிப்பறைதான் உள்ளது.  பத்து நிமிடத்திற்கு மேல் பேருந்து நின்றிருந்தாலும் சில பெண்கள் அந்த பீ மந்தை பேருந்து நிறுத்தத்தில்தான் ஏறுகின்றனர்.  இந்த இடத்தில் நிழற்குடையோ, மர நிழலோ இல்லை.  பின் ஏன் அந்த இடத்தில் அந்தப் பெண்கள் ஏறுகின்றனர்....

நான் பணிபுரியும் மையத்தில் பயிற்சிக்கு வந்த பெண் தலைவர்களை மதுரை மீனாட்சியம்மனை பார்ப்பதற்காக அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்றோம்.  வாகனம் மதுரை ஜான்சிராணி பூங்காவிற்கு அருகில் உள்ள இடத்தில் நிறுத்தப்பட்டது.  வந்திருந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக இறங்கச் சொன்ன போது இருவர் நாங்கள் வரவில்லை.  வண்டியிலேயே இருக்கிறோம் என்றனர். வாங்க வாங்க என்ற வற்புறுத்தியபோது நாங்க வரக்கூடாது என்றனர்.  நீங்கள் வேற மதத்தினரா என்றால், இல்லை...! நாங்கள் வரக்கூடாது, என்று சொன்னவர்கள் அக்கா... தம்பிக்கு புரியிற மாதிரி சொல்லுங்க என்றனர்.  அது என்ன புரியிற மாதிரி...!

மதுரையில் தென்னக ரயில்வேயில் உயர் பதவியில் பணிபுரிகிற அலுவலர் மாதத்தில் ஐந்து நாட்கள் அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு வாசல் தெளிப்பது, கோலம் போடுவது, சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் மனைவிக்காகச் செய்கிறார். மனைவிக்குச் சாப்பாட்டைக் கூட எடுத்து வைத்துவிடுகிறார்.  ஆனால் மற்ற நாட்களில் இவ்வாறு அவர் செய்வதில்லை.  ஏன் அந்த ஐந்து நாட்கள் மட்டும் அவ்வளவு கரிசனம்....

வத்தலக்குண்டு ஒன்றியம் சந்தையூர் ஊராட்சி மன்றத்தின் தலைவர் தெற்கு வலையபட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் மாதத்தின் சில நாட்கள் போவதில்லை. மன்ற கூட்டம் நடந்தால் கூட சாலையின் வடதுபுறத்தில் நின்றுதான் பேசுகிறார். மற்ற நாட்களில் சாலையின் தென்புறத்தில் உள்ள அலுவலகத்திற்கு போக முடியும்.  முக்கியமான மன்றக் கூட்டம் நடக்கும் போது கூட சாலையின் வடப்புறத்தில் நின்று எறுமைமாடு மேய்ப்பவன் போல் சத்தம் போட வேண்டியிருக்கிறது... அப்படி சாலையின் தென்புறத்தில் என்ன இருக்கிறது....

சோழவந்தானுக்கருகில் உள்ள கீழமட்டையான் கிராமத்தில் பெண்கள் வெளியூருக்கு போய்வந்தால் (சந்தைக்கு, விழாக்களுக்கு, பள்ளிக்கு) குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் போக வேண்டும்.  மாதத்தின் ஒரு சில நாட்கள் வீட்டின் ஓரத்தில் அல்லது மாட்டுக் கொட்டத்தில் சணல் சாக்கில்தான் உறக்கம்.... மற்ற நாட்களில் அந்த வீட்டின் இராணி! அந்த நாட்களில் மாடு! அதனால் தான் பெண்களை மாட்டுப் பெண் என்கின்றனரோ....

தேனி மாவட்டம் மரிக்குண்டில் ஆண்களுக்கு சாவடி இருப்பது போல் பெண்களுக்கென பிரத்யேக ஒரு வீடு உள்ளது.  குறிப்பிட்ட நாட்களில் பெண்களுக்கு அதுதான் வீடு... பள்ளி செல்கின்ற மாணவிகள் கூட அங்கிருந்துதான் செல்கின்றனர். 

வருசநாட்டில் திருவிழா சமயம்... இந்த வருசம் ஏம்ப்பா ஒங்க வீட்டில இருந்து பொங்கள் வைக்க யாரும் வரலை... அதுவா எம் பொண்டாட்டி வீட்டுக்கு தூரம்ம்ப்பா... இந்த வருசம் கொடுத்து வைக்கல... வீட்டுக்கு தூரமுன்னா?

வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, தலைக்குத்தீருக்காங்க போன்ற வார்த்தைகளால் சொல்லப்படுவது மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பதைத்தான். இதுதான் மேற்கண்ட இத்தனைக்கும் காரணம்.. இது தீட்டாம்...  

மாதவிடாய் என்பது பூப்படைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சிமுறையில் நிகழும் ஒரு மாற்றமாகும். இது பெண்ணின் கருப்ப¬யிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை குருதி வெளியேறுவதை குறிக்கும். மருத்துவப்படி ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில் போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. 

ஒரு பெண் கர்படைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச் சக்தியை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புகள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில்  சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து குருதி வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறார்கள்.  இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடக நடைபெறுகிறது.

நமது பிறப்பை உறுதி செய்யக் கூடியது இந்த மாதவிடாய் சுழற்சி.  நம் மனித இனத்தைப் போன்றே பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையில் இருக்கின்ற சிம்பன்சி போன்ற விலங்கினங்களிடையேயும் இந்த சுழற்சி நடைபெறுகிறது.  சிம்பன்சிகளிடம் தீட்டு பார்க்கின்ற பண்பு இருப்பதற்கு வாய்ப்பிள்ளை.  ஏன்? அது நம்மைப்போல ஆறு அறிவு உள்ள விலங்கு அல்லவே.

தொற்று வியாதி உள்ளவர்களைக் கூட தொட்டுப் புழங்குகின்ற மனிதன் இதனை மட்டும் தீட்டு என்று ஒதுக்குவதும், புறந்தள்ளுவதும் மிகப் பெரிய தீண்டாமை என்பதை நாம் அறிய வேண்டும்.  காட்டுக்குப் போய்... ஆய் போய்... அங்கு தண்ணீர் இல்லாமல், கல்லால் துடைத்துக் கொண்டு ஊருக்குள் கோவில் வழியாக  வருகிறவர்களை பார்த்திருக்கிறோம்.  மனித மலம் தீட்டு இல்லை... 

நோய்களின் பிறப்பிடம் மனித மலம். மனித மலத்தில் லட்சக்கனக்கான வைரஸ்களும் பாக்டிரியாக்களும் உள்ளன.  இருந்தாலும் பராவாயில்லை இது இயற்கை உபாதை என்கிறோம்.  நமது தாய், தங்கை, மனைவியின் உடலிலும் நிகழும் இயற்கையான நிகழ்வை தீட்டு எனச் சொல்லி அவர்கள் மீது கட்டுப்பாடு சுமத்துவது இன்னும் வேண்டுமா. காலில் ஒரு சின்னப் புன் சீல் வருகிறது. சின்ன கட்டுப்போட்டுக்கொண்டு கோவிலுக்குள் செல்ல அனுமதி.  ஆம் கட்டுப் போட்டுக்கொண்டு கோயிலுக்குள் போகலாம். கயிலி கட்டிக்கொண்டுதான் போகக் கூடாது.  இவைகளையெல்லாம் சரி எனச் சொல்கின்ற ஆகம விதிகள் எழுதாத விதிகளாய் மானிட சாதியில் பாதியானவளை இப்படி கூனிக் குறுக வைப்பதேனோ.

நமது தாயையும், தங்கையையும், மனைவியையும் நாமே ஏன் கேவலப்படுத்துகிறோம். எல்லா மதங்களும் இதில் ஒன்றுபட்டு நிற்பதுதான் நாகரீகத்தின் சொச்சம். 

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி பைபிள்... சூதகஸரி தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்டவள்.  அவளைத் தொடுகிற எவனும் சாயங்கால மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக... அவள் விலக்கலாயிருக்க¬யில் எதன்மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.  அவள் படுக்கையத் தொடுகிறவன் எவனும் தன் வஸதிரங்களைத் தோய்த்து, தண்ணரீல் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.. இப்படி நீள்கிறது.

திருமறை... அது தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டு விலகியிருங்கள்.  அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின்... இப்படி.... நீள்கிறது. இந்து மதம்.... அது ஊர் அறிந்தது...

இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர்களாகப் பெண்களும் பணிபுரியலாம் என்று போராடிப் பெற்ற பின்பும் அந்த மூன்று நாட்கள் அவர்கள் வெளியில்தானே இருக்கிறார்கள்இது எழுதப்படாத விதி.  அரசு இயந்திரமும் இதற்கு ஆட்படுகிற கேவளத்தை என்னவென்று சொல்வது.

உலக ஏகாதிபத்தியம், பொதுவுடமை, அமெரிக்கச் சண்டியர், மேநாட்டுப் பண்பாடு எனப் பேசும் பண்பட்ட மனிதர்கள் தீட்டு மட்டுப்பட பேச வேண்டும்.  சாதீய தீண்டாமையின் இன்னொரு வடிவமும் கூட.  தீட்டிற்கும் தீண்டாமைக்கும் மிகப்பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இது வீட்டுக்குள்ளே தீண்டாமை. கொண்டவனைத் தொட்டால் தீட்டு. பெற்ற பிள்ளையைத் தொட்டால் தீட்டு. உழைத்து ஈட்டிய பொருளைத் தொட்டால் தீட்டு... இப்பெல்லாம் எங்கு இருக்கிறது என்று அப்பாவிபோல்  கேள்வி கேட்பவர்கள் உண்டு.  அவர்களுக்கான ஒரு சில உதாரணங்கள் தான் நாம் இக்கட்டுரையின் முதல் பக்கத்தில் பதிந்திருந்தவை.

ஒரு பெரிய தோப்பு வெளியில் தெரிகின்ற மரங்கள் காய்த்து கனி தருகின்றன. உள்ளே இருக்கின்ற பல பயன் மரங்கள், மரங்களாகவே நிற்கின்றன. வெளியில் தெரிகின்றவைகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.  தோப்பு நன்றாக உள்ளது. யாவரும் நலம்... மேலோட்டமான பார்வை இதைத்தான் எல்லோருக்கும் தருகிறது.

பழம் தமிழன் பூங்குன்றன் யாவரும் கேளிர் என்றான்.  ஆண்கள் பெண்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமின்றி அனைவரும் சொந்தம் என்றவனின் வழிவந்தவர்கள் தீட்டு பார்க்கின்றோம். கோவில்களில், குளங்களில், காடுகளில் நமது குடும்பங்கைளத் காத்தவர்கள் பெண் தெய்வங்களாக இருக்கிறார்கள்... நமது குடும்ப தெய்வங்களிடையே கூட தூரம் பார்க்க வைக்கும் அநீதி இங்குதான் காண்கிறோம்.  

அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீககம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரமான அறிகுறிகள் தோன்றுகின்றன.  உளச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். நமது குடும்பப் பெண்கள் இவ்வாறான உடல் பிரச்னையில் இருககும போது உளப்பிரச்னைக்கு உள்ளாவது தகுமோ.

மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் பேண கூடி இழுத்த தேர் இலக்கை எட்டிக் கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ஊரகப் பகுதியிலும் நாப்கின் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.   இயற்கை உபாதையெல்லாம் தீட்டு என்று பார்ப்பது மிகப் பெரிய மூடத்தனம்.  தெற்கு மலையில் கன்னிமார் சாமி இருக்கு, அதனால் ரோட்டுக்கு தெற்கே மாதவிடாய் காலங்களில் பெண்கள் ரோட்டுக்கு தெற்கே எந்தவொரு வேலைக்கும் செல்லக் கூடாது என்பது கடைந்தெடுத்த மூடத்தனம்.  இதனை கண்டிப்பதோடு நின்று விடாமல் மாற்றங்களை நோக்கி நகர வேண்டும்.  இந்த நகர்தலுக்கான பேச்சை நாம் பேசுவோம்.  நகர்தலை நம் வீட்டுப் பெண்கள்மேற்கொள்ளட்டும்.

இவள் புதியவள் மார்ச் 2011 இதழில் வெளிவந்துள்ளது.

2 comments:

ஜானகிராமன் said...

நிஜமான பதிவு. பெரும்பாலான பெண்குழந்தைகள் உயர்கல்விக்கு செல்லாமல் இடைநிற்பதற்கு மிக முக்கிய காரணம், உயர்நிலைப்பள்ளிகளின் சுகாதாரமற்ற கழிப்பிடங்களும், இது போன்ற இயற்கைசுழற்சியின் போது எதிர்கொள்ளும் அவலங்களும் தான். பேசாப்பொருளையும் பேசத்துணிவோம்.

கண்ணன். சி said...

ஜானகி...
எனது ஊக்கம் நீங்கள்... பேசும் பொருளையே தொடர்நது பேசவிரும்புகிறேன்...
நன்றி!