Sunday, December 19, 2010

குடி ஆட்சி

பேச வேண்டியதை பேசுகிறேன்...


குடி ஆட்சி


மது போற்றுதும் மது போற்றுதும்
அது தரும் போதை போற்றுதும் போதை போற்றுதும்
டாஸ்மாக் போற்றுதும் டாஸ்மாக் போற்றுதும்
இதனோடு ஒட்டியிருக்கும்
பார் போற்றுதும் பார் போற்றுதும்
நியாய விலைக் கடையை புள்ளி விபரத்தில் புறந்தள்ளி
பச்சை வண்ணத்தில் பல ஆயிரம் கடைகள் தந்த
தமிழ்நாடு போற்றுதும் தமிழ்நாடு போற்றுதும்
மது வருவாயில் இலவசத் திட்டங்கள் தரும்
முதலமைச்சர் போற்றுதும் முதலமைச்சர் போற்றுதும்




தீபஒளி திருநாளுக்கு முதல் நாள் மாலை மதுரையிலிருந்து தேனிக்குச் செல்ல ஆரப்பளையம் பேருந்து நிலையத்தில் குடும்பத்தோடு இருந்தோம். எங்களைப் போல் குடும்பத்துடன் வந்துவர்கள் நிறைய பேர் இருந்தனர். தனியாக வந்தவர்களும் உண்டு. மக்கள் நெருக்கடியில் பேருந்தில் ஏறுவது சிரமமாக இருந்தது. ஒரு வழியாக தேனி செல்லும் அரசுப் பேருந்தில் இடம் பிடித்து குழந்தை மனைவியோடு உட்கார்ந்தாகிவிட்டது. அப்படா தேனி வரை நிம்மதி என பெருமூச்சு விட்டேன். பேருந்து நகர ஆரம்பிக்கும் போது பேருந்துக்குள் நிற்பவர்கள் கூட்டம் அதிகரித்தது.
எல்லோரும் ஆண்டுக்கணக்கில் மாதக்கணக்கில் வாரக் கணக்கில் பிழைப்புக்காக திருப்புர், கோயம்புத்தூர், தூத்துக்குடி மதுரை நகரங்களுக்கு வலசை வந்தவர்கள். இவர்களில் குடும்பம் குடும்பமாக வலசை போனவர்களும் உண்டு. தனியாட்களும் உண்டு. இவர்கள் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர் பாளையம் கம்பம் போடி என சிறு நகரங்களுக்குச் சென்று அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு பேருந்தை பிடிக்க வேண்டும். பேருந்தின் வேகத்தை விட பயனிகளின் படபடப்பு வேகமாக இருப்பதை உணர முடிந்தது. பேருந்து மதுரை நகரை தாண்டி கொஞ்சம் வேகம் அதிகரிக்க, ஒரு மது மகன் பேருந்துக்குள்ளேயே வாந்தி எடுத்தான். இவர்களை ன் விகுதி போட்டு அழைப்பதில் தவறில்லை.


வண்டியில் உட்கார முடியவில்லை... வேறு வழியுமில்லை... நடத்துநர் வந்தார்... கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். (குடும்பத்துடன் பயனிகள் பலர் இருக்கும் போது) மது மகனின் செயலுக்கும் இவரது செயலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பின் யாராவது ஒரு இடம் கொடுங்கப்பா... ஒட்கார்ந்து தொலையட்டும். மிகச் சுலபமாக மது மகனுக்கு இருக்கை கிடைத்தது. கொஞ்ச நேரம் மூக்கைப் (சூடு, சொரனை இப்படி எல்லாத்தையும்) பொத்திக் கொண்டு பயனித்தோம். மீண்டும் வாந்தி எடுத்தான். இப்போது பேருந்துக்குள் குரல்...
ஏண்டா அளவா குடிச்சு தொலைய வேண்டியது தான....
உனக்கே சேரலையே, அப்பறம் ஏன் இவ்வளவ குடிக்கனும்....
குடிச்சேன்னா தனியா கார் பிடிச்சுப் போ... ஏன் எங்களையெல்லாம் இப்படி கொல்லுற...
ஏம்ப்பா கண்டரக்டரு இந்தாளை வாலந்தூருல இறக்கிவிடு.... போதை தெளிஞ்சதுக்கப்புறம் வீட்டுக்குப் போகட்டும். கண்டக்டர் வந்தார். நீ யெல்லாம் மனுசன்தானா... ஒரு நல்லநா பொல்ல நாளுலயுமா இப்படி... கண்டக்டர் மூக்கை பொத்திக் கிட்டே பாபர் மசூதி தீர்ப்பு போல ஒரு தீர்ப்பை கொடுத்தார். ஓங் துண்ட எடுத்து வாந்தி எடுத்தத மூடி வை. இனிமே வாந்தி எடுத்தா எடுத்த இடத்துலேயே இறக்கி விட்டுறுவேன் ன்னு தீர்ப்பை சொல்லிட்டு டிக்கெட் எடுக்காதவங்க டிக்கட்ட கேட்டு வாங்குங்க, டிக்கெட்டைப் பத்திரமா வச்சுக்கங்க உசிலம்பட்டியில செக்கர் இருக்கார்... சொல்லிட்டு முன்னாடி போயிட்டார்.
மது மகனின் கூட வந்த இன்னொரு மது மகன் (நான் ஸ்டெடி மது மகன்) துண்ட எடுத்து வாந்தி மேல போட்டு மூடிக்கிட்டே... இங்க யாருப்பா குடிக்காதவக பெரிசா பேசுறீக? ன்னு எல்லரையும் பார்த்து கேள்வி கேக்குறான்.. நின்னுட்டு வந்த மது மகனுக்கு (குடிகாரனுக்கு) உசிலம்பட்டி வரைக்கும் ஒட்கார இடம் கிடைச்சிருச்சு. (வகுத்துப்பிள்ளத்தாச்சிக்கு இடம் கிடைக்கமாட்டிங்குது). குடிகாரர்களுக்கெல்லாம் நி£யம் கிடைச்சிருச்சு. என்னையும் சேர்த்து இரண்டு மூனு பேரு வாயுக்குள்ளேயே முனகினோம். சத்தம் போட்டு பேச முடியலை. ஏன் பேச முடியலை... இது தான் குடிகார நாடாச்சே...


தீப ஒளி திருநாள் அன்று மட்டும் மதுக் கடைகளின் மூலம் வருமானம் 100 கோடி. தலைநகரில் மட்டும் பத்து கோடி. தேனி மாவட்டத்தில் இரண்டு கோடி. இப்படி மாவட்ட வாரிய வருமானம். கருவாடு வித்த காசு வீசவா போகுது, வேப்ப எண்ணைய் வித்த காசு கசக்கவா போகுது என்ற வகையில் மதுவால் வருகிற வருமானம் அவமானம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது தமிழக அரசு. இதனால் பைந்தமிழ் நாடு பாழாய்ப் போகிறது.
தீப ஒளி திருநாள் அன்று மட்டும் மாநிலம் தோறும் மது மகன்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது என்பதை செய்தியாக்கிய நாளிதழ்கள், மாநிலம் முழுவதும் இதனால் ஒழுங்கு தவறுதல் எவ்வளவு மிகுந்துள்ளது என்பதை கவனமாக வெளிக்கொண்டுவரவில்லை. வீடு, பொது இடம், சுற்றுலாத் தளம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர் மது மகன்கள்.
மது அருந்துபவர்களின் பட்டியல் எடுப்பது மிகச் சுலபம். அந்தளவிற்கு மது மகன்களின் (மது மகள்கள்) எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அரசாங்கமே கடை வச்சிருக்கு, நிறைய (நீதி நூல்கள்) படிச்சவங்க மது பாட்டில் விக்கிறாங்க குடிக்கிறதுல மட்டும் என்ன தப்பு இருக்குன்னு நியாயம் கற்பிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். முடியாட்சி போன்று இது குடி ஆட்சி. ஆகையால் குடிமக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.
மது அருந்துபவர்கள் யார்? எல்லோரும்.... எல்லோரும் என்றால் இதில் விதி விலக்கில்லை. யார் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். ஏழ்மையில் உள்ளோர் அதிகமாக மது அருந்துகிறார்கள். அதனாலேயே ஏழ்மையில் உள்ளார்கள் என்பது வேறு. மது மகன்கள் எது குறித்தும் கவலைப்படுவதில்லை என்பது தான் கவனிக்க வேண்டியது.
சரக்கு வச்சிருக்கேன்... நாட்டுச் சரக்கு... இப்படி சினிமா பாட்டெல்லாம் பாடுவதற்கான காலம் மலையேறிப் போச்சு. விளையாட்டுப் போட்டிகளில் கூட விலை உயர்ந்த மதுபானங்கள் விளம்பரமாக வருவதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. நாலைஞ்சு குடும்பம் வாழ்றதுக்கு கோடிக்கணக்கான குடும்பங்கள் மோசமாவதை கண் கூடாகக் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எதற்கெல்லாம் மது பார்ட்டி என்று கேட்டால், மோட்டார் பைக் வாங்கினால் பார்ட்டி, அதை ஓட்டினால் பார்ட்டி, விழுந்தாள் பார்ட்டி, எழுந்தால் பார்ட்டி, ஆஸ்பத்திரிக்குப் போன கூட பார்ட்டி... இப்படி பொறந்தா பார்ட்டி. இறந்தா பார்ட்டி, இன்னும் சில ஊர்களில் ரேடியோ கட்டினா பார்ட்டி, தேர்தல் திருமணம் என எல்லா இடங்களிலும் மது உள்ளது. சிலர் ஏங் வீட்டு விஷேசத்திற்கு தண்ணிக்குப் பதிலாக பிராந்தியைத்தான் ஊத்திக் கொடுப்பேன் என பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனர். பார்ட்டிகளே தினசரி இருக்கும் போது பாவம் மது மகன் என்ன செய்வான்கள்.
குழந்தைகள் பெண்கள் என எல்லோரையும் இந்த வியாதி தொற்றிக்கொண்டுள்ளது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தலைவருக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கூட மது அருந்தியாதாக தகவல் கேட்டு அமைதியாகத்தான் இருக்க முடிந்தது. நாம் எங்கு இருக்கிறோம். வள்ளுவனின் குறளை வாசித்து, அதற்கு உரை எழுதி, மனனம் செய்து பிழைக்கின்றோம். குறள் படி வாழ்வதற்கு மறுக்கின்றோம்.
ஒரு சில அரசியல் அமைப்புகள் மதுவிற்கு எதிராக மிகப் பெரிய பிரச்சாரம் செய்கின்றன. அவர்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் சமீபத்தில் மதுரையில் நடந்த மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெரும்பான்மையான வாகனங்கள் பச்சை வண்ண பலகை கொண்ட கடைகளில் நின்றிருந்தை அன்றைக்கு மதுரையில் இருந்த அனைவரும் அறிவர். கோவை செம்மொழி மாநாட்டிற்கு மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கவில்லை என்பதிலிருந்து மதுக்கடைகள் மருந்துக்கடைகளுக்கு இணையாக இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.
மிகக் குறைந்த விடுமுறை நாட்கள் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிறுவனம் டாஸ்மாக் மட்டும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. விடுமுறை விடாமல் அலுவல் நடைபெற அது என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கடைகளா!
மகிழ்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் காரணியாக மட்டும் மது அமையவில்லை. அது அன்றாடம் தேநீர் பருகுவது போன்ற ஒரு பழக்கத்தை பலரிடையே ஏற்படுத்தி விட்டது. மதுவால் உடலுக்கு கேடு, குடி குடும்பத்தைக் கெடுக்கும் என்றெல்லாம் சொல்லி நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. நமது நாடு என்னும் கப்பல் மது என்னும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மீட்பதற்கு நல்ல தலைவன் வேண்டும்.
நாடு வளர்கிறது. ஆனால், நலிந்தோரின் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஒரு சில குடும்பங்கள் மட்டும் வளர்வதற்கான ஒரு அரசியல் சூழலை கட்டமைப்பதை கட்டாயம் உடைத்தெறிய வேண்டும். குடி ஆட்சியை மாற்றியமைக்க நாம் கதாநாயகன்களை எதிர்பார்த்து இருக்க வேண்டாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

1 comment:

ஜானகிராமன் said...

"குடி"மகன்களை கண்டவுடனே, "குடிமகன்கள்" செருப்பால் அடித்து நாறடித்தால் இந்த அவலம் ஏற்படாது. சட்டப்படியே, மது அருந்திவிட்டு பஸ்ஸில் ஏறக்கூடாது. பொதுஇடங்களில் புகைப்பிடிப்பதையே தடை செய்திருக்கும் நாம், இது போன்ற நிகழ்வுகளை சகித்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை கண்ணன்.