அள்ளிய மணலால்
ஆறெல்லாம் மலடாக
தீர்த்தவாரிக்கென வந்த கடவுள்
திகைத்து நின்றார்
தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு.
கொண்டுவந்த தண்ணீரால்
குளித்துக் கரையேறி
கருவறை புகுந்தார்
அழிக்கும் மனித சக்தியின்
அளவில்லா மகத்துவம் அறிந்து!
● கே. ஸ்டாலின்
சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், வேப்பமரத்து நிழல் போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லா வெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதா? மணலின் சிறு துகள் உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும். அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம் கொள்ளும். குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள் கொடுத்தன. இன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன. எங்கள் கிராமத்தில் இருபது இருபத்த்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஆளும் அரசு வீடு கட்டுவதற்கு கடன் கொடுத்த்து. ஒரே சமயத்தில் இருபது பேர் வீடு கட்டத் துவங்கினர்.
மலையிலும், நிலங்களிலும் பேய்கின்ற மிகுதியான மழை நீரை கண்மாய்களுக்கு கொண்டுவந்து சேர்த்த இரண்டு ஓடைகளின் பெருவாரியான மணலை இருபது வீடுகள் தின்றன. அடுத்தடுத்த வருடங்களில் புதிதாக கட்டத் தொடங்கிய வீடுகளால் இரண்டு ஓடையிலும் மணல் இல்லை. ஓடை பள்ளமானது. ஓடையில் மணல் இல்லை. ஓடைக்கான அடையாளங்கள் இழந்து பள்ளங்களாய் பார்க்க பரிதாபமாக காட்சிதருகின்றன. இந்த மணல்களே நீரை உறிஞ்சுபவை. தண்ணீரை தன்வயப்படுத்தி, ஓடுகின்ற நீரை தூய்மையாக்குகின்ற பணியையும் இந்த மணல்களே செய்து வந்தன. ஒரு முறை ஓடையில் நீரோட்டம் இருந்தால் கிணற்று நீர் மேல்நோக்கி எட்டும் தூரத்திற்கு வரும்.
மலை முகடுகளில் பெய்யும் மழை நீர் கீழ்நோக்கி ஓடிவரும்போது, கற்களின் மீதுபட்டு வரும். அப்படி ஓடிவரும் தண்ணீரின் வேகத்தில் கற்கள் சிறு சிறு துகள்களாகி மணல்களாக உருமாறும். இப்படி மணல்களாக உருமாறுவது ஒரிரு வருடத்தில் நடப்பவை அல்ல. ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்க்க் கூடிய இயற்கையின் சிறந்த செயல்களில் ஒன்று. மணலை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் இழந்து விட்டோம் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. நாங்கள் சிறுவயதில் மழை காலங்களில், மழை முடிந்த வெள்ளம் வடிந்த நேரங்களில் ஊர் தெருக்களில் கூட மணல் இருக்கும். அதில் நாங்கள் வீடு கட்டி விளையாடியிருக்கோம். நாங்கள் கட்டிய வீடுகள் மணல் வீடுகள். அது தெருவிலேயே இருக்கும். அம்மா வந்து இரவு உணவுக்கு அதட்டி அழைக்கும் வரை கட்டி உடைத்துக்கொண்டிருப்போம். அடுத்த நாள் மாலை வேளை வந்தவுடன் மணலில் ஈரம் இருந்தால் திரும்பவும் வீடு கட்டுவோம். எங்களுக்கு வேண்டாதவர்கள் இடிப்பார்கள். வேண்டியவர்கள் எல்லாம் கூடி திரும்பவும் வீடு கட்டுவோம். மனிதர்களிடம் ஈரம் குறைந்து போனாதால் தற்போது எங்கள் ஊர் தெருக்களில் ஈரமான மணல் இல்லை. அடுத்த தலைமுறை கூடி விளையாடாமல் தனி அறைகளில் முட்டாள் பெட்டி என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி பெட்டி முன் தன்னை மறந்து அமர்ந்து நோயை இழுத்துக்கொள்கிறான்.
கபடியும் கிளித்தட்டும் விளையாடிய மணல் சார்ந்த தெருக்கள் இன்று சிமென்ட்டின் உதவியோடு சிறு கற்கலை வெளித்தள்ளி நிற்கின்றன. நாங்கள் மணலை உப்பாய் பாவித்து ஓடி எடுத்து விளையாடிய தெருக்களில் சாக்கடை. மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிய தெருக்களில் இன்று எல்லா நாளும் சாக்கடை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சாக்கடை வாய்க்கால் மணலில் இருந்தால் வடிகட்டுதல், தன்சுத்தம் நடந்திருக்கும்.... சிமென்ட்டால் இருப்பதால் கொசுக்களின் பிறப்பிடமாக மாறியிருக்கிறது.
இலக்கியம் நயத்தில் பேசக்கூடிய அரசியல் வாதி வைகையை பார்வையிட்டு, இங்கு வைகை ஆறு ஓடுவாதாகச் சொன்னார்கள், ஆனால் மணல் ஆறுதான் ஓடுகிறது என்றாராம். ஆனால் வைகையில் பல இடங்களில் மணல் ஆறு கூட இல்லை என்பதுதான் உண்மை. வைகை மதுரையை அடைந்து மதுரையைக் கடக்கும் வரை எந்த இடத்திலும் மருந்துக்குக் கூட மணல் இல்லை. பின் வைகை எப்படி தூய்மையாக இருக்கும். இயற்கையாக தூய்மைப் பணியை செய்கின்ற மணலை எல்லாம் ஒட்ட வழித்து அழித்து மாளிகை கட்டிக்கொண்டோம். வசமாக தண்ணீர் பற்றாக்குறையிலும், கொசுக்கடியிலும் மாட்டிக்கொண்டோம்.
தமிழகத்தில் பல்வேறு நதிகளில் மணல் இல்லை. ஊர்ப்புறங்களில் ஓடிய ஓடைகளில் எல்லாம் மணலை இல்லாமல் செய்துவிட்டோம். சின்னச் சின்ன நதிகளில் இருந்த மணலையும் இழந்துவிட்டோம். தற்போது ஆங்காங்கே பெரிய நதிகளில் அரசாங்கத்தின் மூலம் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் வழங்கப்படுகிறது. மணல் விலை அரிசிவிலையை விட அதிகம். இருந்தும் எவ்வளவு விலை கொடுத்தும் மணலை வாங்க தயாராகிவிட்டோம். மணல் வெளியே எடுப்பதால் உள்ள விளைவை மட்டும் மறந்துவிட்டோம்.
தமிழகம் புவியியல் ரீதியில் மிகுதியாக கடினப்பாறைகளையம், வண்டல் மண் பகுதியுமாக காணப்படுகிறது. இதில் கடினப்பாறைகள் எட்டு சதவீத நீரைமட்டுமே நீரைச் சேமிக்கும். வண்டல் மண் 30 சதவீத நீரைச் சேமிக்கும். செம்மண்ணும், மணலும்தான் அதிகப்படியான நிலத்தடி நீரைச் சேமிக்கும். இந்த இரண்டுவகையான மண்ணும் இன்று பொன்னை விட பாதுகாப்பாய் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செங்கல் சூலைக்காக செம்மண் விலைபோகிறது. அதிகப்படியான வளமுள்ள நிலத்தின் மேல்மண்ணான செம்மண் செங்கள் தயாரிப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வேளாண்மையும் மறுக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், அம்பானி போன்றோர் தனிநபர்கள் வாழ்வாதற்காக தங்களது வாழ்விடங்களை இயற்கை வளங்களை அபகரித்து மிகப்பெரிய பங்களாக்களை அமைத்துள்ளனர். இது எதிர்கால சந்த்தியினருக்கு இழைத்த மிகப்பெரிய இயற்கைவள துரோகமாகும். பெரும்பாலான வசதிபடைத்தோர், தங்களின் தேவைக்கு மிகுதியாக கட்டிடங்களை எழுப்பி மண், மணல் ஆகிய வளங்களை அரிதாக்கிவிட்டனர். நமது தேசத்தில் அரசின் பல்வேறு கட்டிடங்கள் பாழடைந்து பயனற்று கிடக்கின்றன. இவைகள் எல்லாம் பயன்படுத்தாமல் இயற்கை வளங்கள் இன்னலுறுகின்றன.
மண், மணல் இரண்டும் இத்தேசத்து மக்களின் வாழ்க்கையோடு பிணைந்துள்ள இயற்கை வளம். இவற்றைப் பாதுகாக்கத் தவறுவது மனித இனத்தை பாதுகாக்கத் தவறிவிடுவோம் என்கிற அச்சத்தை ஏற்படுத்த தவறவில்லை. ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு குறையவில்லை. ஆனால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. நிலத்தடி நீரிலும் பல்வேறு பிரச்சனைகள்.... இவைகளின் பின்னால் இருப்பது மணல்... வேளாண்மை பாதிப்பின் பின்னால் இருப்பது மண். மண்ணையும் மணலையையும் பாதுகாக்க அரசிடம் எந்த்த் திட்டமும் கொள்கையும் இல்லை என்பதே வரைமுறையின்றி வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதிலிருந்து நாம் அறிகிறோம். மழை நீரைச் சேகரிக்கின்ற மணலை கட்டிடங்களில் கொட்டுகிறபோது, கொட்டும் மழை நீர் வெள்ளமாகி வீணாகிப் போகிற காட்சியை கண்டுகொண்டே இருப்போம். இருக்கின்ற இயற்கை வளத்தை பாதுகாக்க ஓரிரு அரசு அதிகாரிகள் துணிச்சலோடு செயலாற்றும் போது, உயிரை துண்டாடுகிற கோரச் சம்பவங்கள் மணல் கொள்ளையர்களால் அரங்கேறுகிறது. ஆனால் ஆள்வோர்?
சில பகுதிகளில் மக்கள் மணல் கொள்ளையின் பாதிப்பை உணர்ந்து, துணிந்து எதிர்க்கின்ற போது, அவர்களுக்கு ஆள்வோரின் ஆதரவு? வசதிபடைத்தோருக்கு வளங்கள் இன்று வரைமுறையின்றி வழங்கப்படும் போது, எதிர்காலத்தில் பாதிப்பு எல்லோருக்கும் தான். நீரையும் மணலையும் சேமிக்கின்ற ஏரி கண்மாய்கள் ஏகத்திற்கு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றன. குவாரிகள் எனும் பெயரில் நீரைச் சேமிக்கின்ற பாறைகளை உடைத்து, சுரண்டல் நடக்கிறது. நீரைச் சேமிக்கின்ற எல்லா இடத்திலும் மனிதன் கைவைக்கும் போது எண்ணில் அடங்கா துயரம் இப்போதே வரத் தொடங்கிவிட்டது. அச்சம் என்பது மடமையாடா என்பதை மனதில் கொண்டு இயற்கை வளங்களை அபகரிப்பதிலும் அச்சல் கொள்ளாமல் இருப்பது அறிவீணம் என்பதை எப்படி அறிவுறுத்துவது.
மண்ணும் மணலும் பாதுகாக்க வேண்டிய ஒன்று என்பதை அறிந்த பின்பு, ஏதாவது செய்ய வேண்டுமல்லவா? என்ன செய்யலாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காலத்தோடு மண் கரையால் நிற்கின்ற கண்மாய்கள் ஏரிகள் நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்திற்கு சான்று பகர்கின்றன. ஆனால் இன்று நமது புதிய தொழில்நுட்பத்தால் உருவான பல கட்டிடங்கள் விரிசலடைந்து வாய்பிளப்பது வேதனையளிக்கிறது. கிராமப் புறங்களில் உருவானஅரசு கட்டிடங்கள் தனிநபர் கட்டிடங்கள் போல் நீடித்த காலத்திற்கு உறுதியாக இருப்பதில்லை. அரசு கட்டிடங்களை நன்கு பாரமரித்து நீடித்த ஆயுளை கட்டிடங்கள் பெறும்போது புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அவசியமில்லாமல் போகிறது. இதனால் இதற்குத் தேவையான மணல், கல், செங்கல், சிமென்ட் போன்ற வளங்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன.
தனிநபர்கள் வாழ்விடங்கள் கட்டும்போது வசதிக்கு கட்டாமல் வாழ்வதற்கு போதியளவிற்கு மட்டும் வீடுகள் கட்டும் போது நிலம் தொடங்கி, பல்வேறு வகையில் இயற்கை வளங்கள் காக்கப்படுகின்றன. நமது முன்னோர்கள் வசித்த வாழ்விடங்களை சீரமைப்பு செய்து வசிப்பிடங்களாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனமாகும். சிலர் வாஸ்து பார்த்து வீடுகளை தொடர்ச்சியாக மாற்றியமைக்கின்ற வீண் செலவை தவிர்க்கலாம்.
வீடுகளுக்கான சுற்றுச் சுவர் கட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம். சுற்றுச் சுவர் அவசியம் எனும் போது தாவரங்களினால் வேலி அமைக்கலாம். உயிர் தாவரங்கள் மூலம் சுற்று வேலி அமையும் போது காண்பதற்கு குளிர்ச்சியையும், சூழல் பாதுகாப்பையும் தரும். பொதுவாக சுற்றுச் சுவர் அமைக்கப்படுவது தொழிற்சாலைகள், பெரிய வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இவைகளில் உயிர் தாவர வேலி அமைத்து பாரமரிப்பது பெரிய செலவாக இராது. எனவே, இனிமேல் புதிதாக சுற்றுச் சுவர் கட்டமால் உயிர் தாவர வேலிக்கு முன்வரலாம்.
கிராமங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை தோரண வாயில் அமைப்பது ஒரு படோபடமாகவே படுகிறது. கல், மணல், சிமென்ட் கொண்டு அமைக்கப்படுகிற தோரண வாயில்கள், அலங்கார வளைவுகள் அவசியமற்றவை. எந்தவொரு பயன்பாடுமின்றி, சுய விளம்பரத்திற்கும், அழகுக்கும் இயற்கை வளங்களை அழிப்பது நியாயமாக. பல்வேறு புங்காக்களில் மரங்களைக் கொண்டே அழகுடன் தோரண வாயில் அமைத்திருப்பர். காண்பதற்கு இதமாகவும், இயற்கைக்கு வலுசேர்ப்பதாகவும் இருக்கும். அதை விடுத்து இயற்கைக்கு எதிராக தோரணவாயில்கள் அமைப்பதை தவிர்த்திடலாம். அரசாங்கம் இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை கொள்கை முடிவாக எடுத்து நிறுத்திக்கொள்ளலாம்.
ஆள்வோர்கள் தொடர்ச்சியாக எல்லாத் தெருக்களையும் சிமென்ட் தெருக்களாக மாற்றிவிட திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். ஆட்சியாளர்கள் மாட்சிமையோடு கவனிக்க வேண்டிய விசயம் இந்த சிமென்ட் சாலைகள். ஊரில் விழுகிற ஒரு சொட்டு தண்ணீர் கூட நிலத்திற்குள் செல்லாமல் ஊரை விட்டு ஓடச் செய்கிறது சிமென்ட் சாலைகள். நிலத்தடி நீர் மாசகிவருகிற இந்தச் சூழலில் அந்தந்த இடங்களில் மழை நீரை சேமிக்க வேண்டிய நாம், மண் மாத மீது கல், மணல் கலந்த சிமென்ட் வைத்து அடைப்பது தகாது.
மண்ணையும், மணலையும் பாதுகாக்கின்ற இன்னொரு இயற்கை தந்த கொடை மரங்கள். மரம் மண்ணின் அரண். அரண்மனைக்காக அரண்கள் எல்லாம் காவுவாங்கப்படுகின்றன. மரங்களைக் காப்பதும், வளர்ப்பதும் மண்ணை வளப்படுத்த ஏதுவாக அமையும். நாம் புதிதாக உருவாக்கின்ற கட்டிடங்கள் எத்தனை இயற்கை வளங்களை ஏப்பம்விடுகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். அதற்காக நீங்கள் யாரும் வீடு கட்ட வேண்டாம், பரதேசிகளாக மண் மாத மீது படுத்துறங்குங்கள் என்று சொல்லவில்லை. புதிதாக கட்டிடம் எழுப்பும் போது, எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து செய்யுங்கள். அவற்றின் பயன்பாட்டை கணக்கிடுங்கள். அளவான வீடு, வளமான வாழ்வு, வளங்கள் பாதுகாப்பு என்பதை உணர்ந்திடுங்கள் என்றே சொல்கிறோம்.
சிலரைப்பார்த்து ஏலேய்... மண்ணு.... என்று சொல்வதுண்டு. மண் என்பது சாதரணமில்லை, அது உயிர்களின் தொகுப்பு. உணர்ந்திடுவோம். மண்ணையும் மணலையும் காத்திடுவோம். போட்டிகளில் சொல்வதுண்டு, மண்ணைக் கவ்வ வைப்பேன் என்று, ஆனால் இன்று பலர் மணல் திருடுவதில் கெட்டிக்கார்ர்களாய் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களது கொடி கட்டாயம் இறக்கப்பட வேண்டும். எதிரியாய் இருந்தாலும், குருதி உறவாய் இருந்தாலும் இவ்விசயத்தில் ஆள்வோரும் வாழ்வோரும் இரக்கம்கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளோடு நிறைவு செய்கிறேன்.
பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்த கட்டுரை
No comments:
Post a Comment